தேர்தல் தகராறு வழக்கு 40 பேருக்கு முன்ஜாமீன் : ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: தேர்தல் தகராறு தொடர்பான வழக்கில் ஊராட்சி தலைவர் உள்பட 40 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே குண்டுக்கல் ஊராட்சி தலைவர் கோப்பெரும்தேவி உள்பட 40 பேர், முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி பழனிவேல் முன்பு கடந்த 4ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, 40 பேர் சார்பாக வக்கீல் செல்வராஜ் ஆஜராகி, ‘‘கிராம பஞ்சாயத்து தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது கலவரம் ஏற்பட்டது. எனினும், சுயேச்சைகள் பெரும்பாலானவர்கள் வெற்றி பெற்றனர். இதனால் உள்நோக்கத்துடன் எங்கள் 40 பேர் மீதும் தீவெட்டிப்பட்டி போலீசார் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தேர்தல் தகராறு சம்பவத்தில் படுகாயம் அடைந்த போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிவிட்டனர். மனுதாரர்கள் அனைவரும் நிரபராதிகள். அவர்களுக்கு ஜாமீன் தரவேண்டும்’’ என்றார். இதை நீதிபதி ஏற்றுக் கொண்டு 40 பேருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.