எஸ்சி மாணவர்களுக்கு உதவி தொகை உயர்வு : முதல்வர் ஜெ
சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் மாதாந்திர உதவி தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கான சோப்பு, சலவை தூள், தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்கள் வாங்கவும், இதர சிறு செலவுகளுக்காகவும் மாதந்தோறும் ரூ.25 வழங்கப்பட்டு வந்தது.
இந்த தொகை ரூ.50 ஆக உயர்த்தப்படுகிறது. கல்லூரி விடுதி மாணவ, மாணவிகளுக்கான தொகை ரூ.35ல் இருந்து ரூ.75 ஆக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் கல்லூரி விடுதி மாணவ, மாணவிகள் 13,013 பேரும், பள்ளி விடுதி மாணவ, மாணவிகள் 1 லட்சத்து 7,002 பேரும் பயன் அடைவார்கள்.
இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3 கோடியே 19 லட்சத்து 55 ஆயிரத்து 700 ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளில் இடம் கேட்டு அதிகளவில் விண்ணப்பங்கள் வந்ததால், 2011-12ம் கல்வி ஆண்டில் கூடுதலாக 1,500 இருக்கைகள் ஏற்படுத்த ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.