அட்சதைக்கு பதில் அடி, உதை : மணமேடையில் மாப்பிள்ளை கதறல்!
திருமலை: விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (26), அதே பகுதியை சேர்ந்தவர் திலீபா (25). இவர்கள் 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். காதல் விவகாரம் தீலிபா வீட்டுக்கு தெரிய வந்தது. அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் விஜயகுமார் வீட்டில் காதலுக்கு பச்சைக் கொடி காட்டினர். இதனால் விஜயகுமார், அவரது பெற்றோருடன் சென்று திலீபா வீட்டில் முறைப்படி பெண் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய திலீபா, விஜயகுமார் வீட்டுக்கு வந்தார். விஜயகுமாரின், திலீபாவுக்கும் திருமணம் செய்ய விஜயகுமார் பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக நேற்றுமுன்தினம் திருமலைக்கு வந்தனர்.
திருமலை சுதர்சன சத்திரத்தில் உள்ள புரோகிதர் சங்கத்தில் திருமண ஏற்பாடு நடந்தது. நேற்று மாப்பிள்ளை அலங்காரத்தில் விஜயகுமார், மணமேடையில் பெண்ணுக்காக காத்திருந்தார். தாலிகட்ட 10 நிமிடம் இருக்கும்போது, திடீரென பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் கும்பலாக வந்தனர். அவர்கள் விஜயகுமாரை சரமாரியாக அடித்து, உதைத்தனர்.
இதனால் இருதரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும், திருமலை போலீசார் விரைந்து வந்து இருவீட்டாரையும் சமரசம் செய்தனர். இருவரும் மேஜர் என்பதால் திருமணத்தை தடை செய்ய முடியாது. எனவே அவர்கள் விருப்பப்படி திருமணம் செய்து வையுங்கள் என பெற்றோருக்கு அறிவுரை கூறி அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.