சாம்பியன்ஸ்லீக் 20-20 பைனலில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை - பெங்களூர் மோதின. முதலில் பேட் செய்த மும்பை 139 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. பிராங்க்ளின் 41, சூரியகுமார் யாதவ் 24, அம்பாதிராயுடு 22, மலிங்கா 16, கன்வார் 13, சதீஷ் 9, பொல்லார்டு 2, பிளிஸ்ஸார்டு 3 ரன்கள் எடுத்தனர். பெங்களூர் தரப்பில் பத்கல் 3, வெட்டோரி 2, அரவிந்த், நேன்ஸ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். தொடர்ந்து ஆடிய பெங்களூர் ஆரம்பத்தில் அதிரடி காட்டியது. 4 ஓவரில் 38 ரன்கள் விளாசப்பட்ட நிலையில் தில்ஷானை 27 ரன்னில் மலிங்கா கிளீன்போல்டாக்கினார்.
அதன்பின்னர் கெய்ல் 5, கோக்லி 11 ரன்களில் ஹர்பஜன் பந்தில் வீழ்ந்தனர். ஓவருக்கு 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் அடுத்து வந்த வீரர்களும் பவுண்டரி, சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு விக்கெட்டை மளமளவென பறிகொடுத்தனர். அகர்வால் 14, சவுரப்திவாரி 17, அருண்கார்த்திக் 0, கைப் 3, வெட்டோரி 1, பத்கல் 6 என வரிசையாக பெவிலியனுக்கு நடையை கட்டினர். முடிவில் 19.2 ஓவரில் 108 ரன்னுக்கு பெங்களூர் ஆல்அவுட் ஆனது. இதனால் 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மும்பை அணி கோப்பையை வென்றது.
ஹர்பஜன்சிங் 3, மலிங்கா, அகமது, ஷகல் தலா 2, பொல்லார்டு 1 விக்கெட் கைப்பற்றினர். பட்டம் வென்ற மும்பை அணிக்கு ரூ.11.5 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. பெங்களூர் அணிக்கு ரூ.6 கோடி கிடைத்தது. ஆட்டநாயகன் விருதை ஹர்பஜன்சிங் தட்டி சென்றார். 328 ரன்கள் குவித்த நியூசவுத்வேல்ஸ் அணியின் டேவிட்வார்னருக்கு தங்கபேட் வழங்கப்பட்டது. 10 விக்கெட் சாய்த்த மலிங்கா தங்கத்திலான பந்தை தட்டிசென்றார். தொடர் நாயகன் விருதையும் மலிங்கா தனதாக்கினார்.
கேப்டன்ஸ் கார்னர்
ஹர்பஜன்சிங்: குறைந்த அளவே ரன்எடுத்திருந்த போதும் நிச்சயம் ஜெயிக்க முடியும் என பொல்லாக் நம்பிக்கையூட்டினார். அதன்படியே சிறப்பாக செயல்பட்டோம். கெய்ல், தில்ஷான், கோஹ்லி ஆகியோரை விரைவிலேயே வெளியேற்றியதால் வெற்றி பெற முடிந்தது. மலிங்கா தொடர் முழுவதும் அசத்திவிட்டார். அபுநேச்சிமும் சிறப்பாக செயல்பட்டார். சச்சின், ரோகித்சர்மா, முனாப்படேல் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாத நிலையிலும் நாங்கள் வெற்றி பெற்றது திருப்தி அளிக்கிறது. அவர்கள் மீண்டும் அணிக்கு திரும்பும்போது அணி மேலும் வலுவடையும்.
வெட்டோரி:சற்று கடினமான ஸ்கோர் என்றாலும் எட்டக்கூடியதுதான். துவக்கம் சரியாக கிடைத்தும் அதனை பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டோம். மும்பை அணி ஒருசில ஆட்டங்களில் இந்த மைதானத்தில் விளையாடியுள்ள அனுபவத்தால் அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் அசத்தி விட்டனர். தில்ஷான், கெய்ல், கோஹ்லி அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் அதிலிருந்து மீளமுடியாமல் போய்விட்டது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook