ஊழலுக்கு எதிராக 23 மாநிலத்தில் 38 நாட்கள் அத்வானி யாத்திரை!
புதுடெல்லி: ஊழலுக்கு எதிராக 23 மாநிலங்களில் அக்டோபர் 11 தொடங்கி நவம்பர் 20 வரை 38 நாட்கள் அத்வானி யாத்திரை மேற்கொள்ளவிருப்பதாக பா.ஜ. நேற்று அறிவித்துள்ளது. ஊழலுக்கு எதிராக நாடு தழுவிய யாத்திரை நடத்தப்போவதாக பா.ஜ. தலைவர் எல்.கே.அத்வானி கடந்த மாதம் அறிவித்தார். குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த இடத்திலிருந்து யாத்திரை புறப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் பீகாரிலிருந்து புறப்படும் என தகவல் வெளியானது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கொடியசைத்து யாத்திரையை தொடங்கி வைக்கிறார் என்றும் யூகங்கள் வெளியாயின.
யாத்திரை புறப்படும் இடத்தை குஜராத்திலிருந்து பீகாருக்கு மாற்றியதன் காரணமாக டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற பா.ஜ. தேசிய செயற்குழு கூட்டத்தை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி புறக்கணித்ததாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் அத்வானியின் யாத்திரை விவரங்களை பா.ஜ. மேலிடம் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
பீகாரில் ஜெய்பிரகாஷ் நாராயண் பிறந்த இடமான சிதாப்தியாராவிலிருந்து வரும் அக்டோபர் 11ம் தேதி அத்வானி யாத்திரை தொடங்குகிறார். நவம்பர் 20ம் தேதி டெல்லியில் யாத்திரை நிறைவு பெறுகிறது. 38 நாட்கள் 23 மாநிலங்கள் வழியாக சுமார் 7800 கிலோ மீட்டர் தூரத்துக்கு யாத்திரை செல்லும். ஊழலுக்கு எதிராக நடத்தப்படும் இந்த யாத்திரைக்கு ஜன் சேத்னா யாத்திரை என பெயரிடப்பட்டுள்ளது. யாத்திரையை ஒட்டி நாடு முழுவதும் கருத்தரங்குகள், தெருமுனை விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்படும். இந்த தகவல்களை பா.ஜ. பொதுச் செயலாளர் அனந்த்குமார் வெளியிட்டார்.