சென்னை: சென்னையில் இன்று காலை முதல் 9 முக்கிய இடங்களில் மீண்டும் கடைகள் திறக்கப்பட்டதையடுத்து, பொதுமக்கள் அதிகம் கூடுவதை தடுக்க காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். விதிகளை மீறும் கடைகள்மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தினசரி தொற்று எண்ணிக்கை படுவேகமாக இருந்த நிலையில், மே 7ம் தேதி முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்தினார். அதை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கால் கொரோனா பரவல் வேகம் குறைந்தது.
இதையடுத்து படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனால் வீட்டில் முடங்கி கிடந்த மக்கள் வெளியில் வந்தனர். அவர்கள் கொரோனா தடுப்பு முறைகளை முறையாக பின்பற்றாததால் தமிழ்நாட்டில் கொரோனா மீண்டும் சற்று அதிகரித்தது. குறிப்பாக, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதிகளிலும் பாதிப்பு அதிகரித்தது. சென்னையை பொறுத்தவரை பாதிப்பு மீண்டும் அதிகரித்தது. சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் சேருவது தொடர்ந்து காணப்பட்டால் அப்பகுதி மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி ஆணையர்கள், காவல் துறையினர் அப்பகுதியை மூடும் நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து கடந்த 30ம் தேதி சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள 9 இடங்களான ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை, ஜாம் பஜார் பாரதி சாலை ரத்னா கபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, பக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி. போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை, ராயபுரம் மார்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை வரை வணிக வளாகங்கள், கடைகள் திறக்க இன்று காலை வரை அனுமதி மறுக்கப்பட்டது. இதேபோல் வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோயில் வரை அமைந்தகரை மார்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திரு.வி.க.நகர் பூங்கா சந்திப்பு வரை மற்றும் ரெட்ஹில்ஸ் மார்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை ஆகிய பகுதிகளில் உள்ள வணிகவளாகங்கள் மற்றும் அங்காடிகள் திறக்க இன்று காலை வரை தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த 9 இடங்களில் அங்காடிகள், வணிக வளாகங்களை திறக்க விதிக்கப்பட்டு இருந்த தடை இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் இன்று காலை முதல் இந்த 9 இடங்களில் கடைகள் திறக்கப்பட்டது. இதனால் காலை முதலே பொதுமக்கள் கடைகளுக்கு வரத் தொடங்கினர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்ல பொதுமக்களை அறிவுறுத்தினர். அதேநேரம், கொரோனா தடுப்பு விதிகளை மீறும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று சென்ைன மாநகராட்சி கடுமையாக எச்சரித்துள்ளது. ஒவ்வொரு கடைகளிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்று மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதனால் இன்று காலை முதலே வணிக பகுதிகள் அனைத்தும் பரபரப்பாக காணப்பட்டது.