ஆட்டுப்பால் கலந்தால் இரும்பைவிட உறுதி.. புல்லட் புரூப் ரெடி!
ஆம்ஸ்டர்டாம்: எதிரிகள் நாலா பக்கம் இருந்தும் சரமாரியாக சுட்டுக்கொண்டே இருப்பார்கள். அவற்றின் நடுவே தைரியமாக புகுந்து வருவார் ஹீரோ. தூசி தட்டுவதுபோல புல்லட்களை அசால்ட்டாக தட்டிவிட்டு ஸ்டைலாக நடந்து வருவார் ஹீரோ. இப்படி பல படங்களில் பார்த்துவிட்டோம். இது விரைவில் நிஜமாகப் போகிறது என்கின்றனர் ஹாலந்து விஞ்ஞானிகள். ஹாலந்தின் தடயவியல், மரபியல் சங்கத்துடன் இணைந்து இதுதொடர்பான ஆராய்ச்சியில் ஜலிலியா எசைதி என்ற பெண் விஞ்ஞானி ஈடுபட்டுள்ளார். ஆய்வு பற்றி அவர் கூறியதாவது:
ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் கதாபாத்திரங்களின் உடல் மீது பட்டதும் துப்பாக்கி தோட்டாக்கள் கீழே விழுவதை சினிமாவில்தான் பார்த்திருக்கிறோம். உடலோடு ஒட்டிய புல்லட் புரூப் ஆடையை உருவாக்கும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. சிலந்தி வலை கட்ட பயன்படுத்தும் பிசின் மிகவும் உறுதியானது. அதில் இருக்கும் புரோட்டீன்தான் அதன் உறுதிக்கு காரணம். இதே வகையான புரோட்டீனுடன் கூடிய பால் தருவதற்காக மரபணு மாற்ற தொழில்நுட்பம் மூலம் ஆடு உருவாக்கப்படும்.
அந்த ஆட்டுப் பாலையும் சிலந்தியின் பிசினையும் கலக்க வேண்டும். அதை காய வைத்து துணி போல நெய்ய வேண்டும். இது இரும்பைவிட 10 மடங்கு உறுதியாக இருக்கும். இவ்வாறு ஜலிலியா கூறினார். இது ஆய்வின் ஒரு கட்டம்தான். இந்த ஆட்டுப்பால் இழையை எதற்காக உடை போல தயாரித்து அணிந்துகொள்ள வேண்டும்? அதையே மனித தோலாக்கிவிட்டால்? விஞ்ஞானிகள் இப்படியும் யோசிக்காமல் இல்லை. இதுபற்றி அவர்கள் கூறுகையில், ‘‘நமது தோலின் மேற்பரப்பில் கெரட்டின் என்ற புரோட்டீன் உள்ளது. இதற்கு பதிலாக மரபணு மாற்ற முறையில் சிலந்தி வலை பிளஸ் ஆட்டுப்பால் புரோட்டீனை செலுத்திவிட்டால் நமது தோலே உறுதியாகி விடும். ஆனால், இது நீண்ட பிராசஸ். ஆராய்ச்சி முடிய பல ஆண்டுகள் ஆகும்’’ என்றனர்.