பீகாரில் கனமழை: பலி எண்ணிக்கை 72 ஆக உயர்வு
பாட்னா: பீகாரில் கனமழைக்கு இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர். 73.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிஸான்கஞ்ச், சம்ப்ரான், மதுபானி உள்ளிட்ட 14 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நீர்நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. கனமழைக்கு சுமார் 73.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதில், 2.74 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கனமழைக்கு இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆங்காங்கே உணவு சமைத்து வழங்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரயில் தண்டவாளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ரயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.