சென்னை' திரைப்பட துறையில் தகவல் களஞ்சியம் என புகழப்படும் பிலிம் நியூஸ் ஆனந்தன் மரணம் அடைந்தார்.தமிழ் சினிமாவில் தகவல் களஞ்சியம் என்று புகழப்படுபவர் பிலிம் நியூஸ் ஆனந்தன் (89). சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டிருந்தார். வயது முதிர்வு மற்றும் நுரையீரல் பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று பகலில் மரணம் அடைந்தார்.
பழங்கால ஊமைப் படங்கள் மற்றும் நிகழ்கால தமிழ் சினிமாவின் தகவல் களஞ்சியமாகத் திகழ்ந்த பிலிம் நியூஸ் ஆனந்தன், சினிமா மற்றும் நட்சத்திரங்கள் பற்றிய பல அரிய தகவல்களை ரசிகர்கள் அறிந்துகொள்ளும் வகையில் திரட்டி வைத்திருந்தார். சுருக்கமாக, திரையுலகின் விக்கிபீடியாவாக அவர் விளங்கினார்.
1958ல் ‘நாடோடி மன்னன்’ படத்தின் மூலம் திரைப்பட மக்கள் தொடர்பாளராக எம்.ஜி.ஆர் மூலமாக அறிமுகம் செய்யப்பட்ட பிலிம் நியூஸ் ஆனந்தன், அனைத்து மொழிகளிலும் சேர்த்து 1,500 படங்களுக்கு மேல் பி.ஆர்.ஓ ஆகப் பணியாற்றி இருக்கிறார். அவர் திரட்டி வைத்திருந்த பல அரிய சினிமா மற்றும் நட்சத்திரங்களின் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை, ‘சாதனை படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு’ என்ற பெயரில் மிகப் பெரிய ஆவணப் புத்தகமாக, தமிழக அரசு நிதியுதவியுடன் வெளியிடப்பட்டது. 1991ல் கலைமாமணி விருது உட்பட ஏராளமான விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
மரணம் அடைந்த பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு மனைவி சிவகாமி, மகன்கள் பி.ஆர்.ஓ டைமன்ட் பாபு, ரவி, மகள்கள் கீதா, விஜயா உள்ளனர். அவரது மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். நாளை பிலிம் நியூஸ் ஆனந்தனின் இறுதிச்சடங்கு சென்னையில் நடக்கிறது. தமிழ்த் திரையுலகினர் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, இரங்கல் தெரிவித்துள்ளனர்.