நள்ளிரவு சுடுகாட்டில் மயான கொள்ளை எரியும் பிணத்தை சூலாயுதத்தால் குத்தி எடுத்து சாப்பிட்ட மருளாளி திருச்சி அங்காளபரமேஸ்வரி கோயிலில் மகா சிவராத்திரி விழா
திருச்சி: திருச்சி பெரியகடை வீதியில் உள்ள பூக்குளம் அங்காள பரமேஸ்வரி கோயிலில் 80ம் ஆண்டு மகா சிவராத்திரி திருவிழா கடந்த 6ம் தேதி துவங்கியது. மகாசிவராத்திரி தினத்தன்று காலை அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. 3ம் நாளான நேற்று அங்காள பரமேஸ்வரி அம்மன், பேச்சியம்மனுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை காட்டப்பட்டது.இதையடுத்து இரவு 9மணிக்கு மேல் புஷ்ப அலங்காரத்தில் காட்சியளித்த பேச்சியம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. இரவு 10.30 மணிக்கு மேல் மயான கொள்ளை நிகழ்ச்சியையொட்டி கோயில் மருளாளி ராஜேந்திரன் பேச்சியம்மன் வேடமணிந்து மேளதாளங்கள் முழங்க சூலாயுதத்தை கையில் ஏந்தியபடி பக்தர்களுடன் ஊர்வலமாக மயான கொள்ளை நிகழ்ச்சிக்கு சென்றார்.
நள்ளிரவு 12.45 மணிக்கு ஓயாமரி சுடுகாட்டில் எாிந்து கொண்டிருந்த பிணத்தில் மருளாளி ராஜேந்திரன் ஆக்ரோஷமாக சூலாயுதத்தால் குத்தி எடுத்து சாப்பிட்டு, அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி குறி சொன்னார். பின்னர் மீண்டும் கோயிலுக்கு புறப்பட்டார்.4ம் நாளான இன்று மாலை 6மணிக்கு மேல் 9மணிக்குள் 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெறுகிறது. 5ம் நாளான நாளை இரவு 7மணிக்கு வளையல் அலங்காரமும், சிம்ம வாகனத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது. வரும் 12ம் தேதி 6ம் நாள் விழாவில் மாலை 7மணிக்கு உற்சவ அம்மபாள் அன்னபூரணி அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். 16ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.
பக்தர்கள் மீது தடியடி ஓயாமரி சுடுகாட்டில் நள்ளிரவு மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இதில் கூட்ட நெரிசலை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. 15க்கும் மேற்பட்ட ஆண், பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் திருநங்கைகள், இளைஞர்கள் என கட்டுக்கடங்காத பக்தர்கள் குவிந்தனர். மருளாளி அருகே வர பக்தர்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது. இதனால் போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்த லேசான தடியடி நடத்தினர். அப்போது சிலர் கல்வீசியதில் கோட்டை போலீஸ் எஸ்ஐ முகமது அலி காயமடைந்தார். அவரை பக்தர்கள் மீட்டு பாதுகாப்பாக அழைத்து சென்றனர். பின்னர் போலீசார் தடியடி நடத்தி பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். இதனால் சுடுகாட்டில் பரபரப்பு ஏற்பட்டது.