மதுரை: தேர்தலில் அதிமுக சீட்டுக்காக ஓ.பன்னீர்செல்வம், விஸ்வநாதன் உள்ளிட்ட அமைச்சர்களிடம் பணம் கொடுத்த அதிமுகவினர் பட்டியல் தயாரிக்க மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உளவு துறையினர் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் சீட் வாங்கித் தருவதாக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் ஆகிய ஐவர் அணியினர் பேரம் பேசி கோடிக்கணக்கில் பணம் வாரி சுருட்டியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து உளவு துறையினர் ஒவ்வொரு மாவட்டத்திலும் விசாரணை நடத்தி உடனடியாக பட்டியல் தயாரிக்கும்படி உளவு துறையினருக்கு மேலிட உத்தரவு வந்துள்ளது.
இதை தொடர்ந்து உளவு துறையினர் அதிமுக சீட் கேட்டு விருப்ப மனு அளித்தவர்களின் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு அதிரடி விசாரணையில் இறங்கி உள்ளனர். மதுரை, தேனி, திண்டுக்கர், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று அதிமுகவினரிடம் ரகசிய விசாரணையை தொடங்கினர். உளவு துறையினர் தங்கள் வீடு தேடி விசாரணைக்கு வந்ததை கண்டு, தனக்கு சீட் கிடைக்க போகிறது என்று முதலில் பணம் கொடுத்தவர்கள் நினைத்தனர். ஆனால் உளவுத்துறையினர், “நீங்கள் சீட்டுக்காக பணம் கொடுத்தீர்களா? எந்த அமைச்சரிடம் எவ்வளவு கொடுத்தீர்கள். உண்மையை மறைக்காமல் சொல்லவேண்டும்.
பொய் சொல்லி தப்ப முடியாது, தகவல் ரகசியமாக இருக்கும், மேலிடத்துக்கு (ஜெயலலிதா) மட்டும் அனுப்பப்படும்” என்றார்களாம். முதலில் தயங்கிய அதிமுகவினர் விசாரணக்கு பயந்து பணம் கொடுத்ததை ஒப்புக்கொண்டு உண்மையை கக்கினர். மதுரையில் தற்போதுள்ள சில எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏக்கள், மற்றும் மாநகராட்சியில் பதவியிலுள்ள முக்கிய புள்ளிகள், மாநகராட்சி பெண் கவுன்சிலர்களிடம் விசாரணை நடந்துள்ளது. பணம் கொடுத்தவர்கள் பெயர், எந்த அமைச்சரிடம், எவ்வளவு என்ற பட்டியல் மாவட்டவாரியாக தயாரிக்கப்படுகிறது. இதில் பலரும் ஓ.பன்னீர்செல்வம், விஸ்வநாதன் பெயர்களை சொல்லி இருப்பதாக பணம் கொடுக்காத அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இது அதிமுகவில் பணம் கொடுத்தவர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை உண்டாக்கி உள்ளது.