பெங்களூரு: ஐஏஎஸ் அதிகாரி ரவி மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணை கோரி பாஜ, மஜத எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இரவு முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.கர்நாடகா மாநிலத்தில் இளம்வயது ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர் டி.கே.ரவி. மாநில வணிகவரித்துறை கூடுதல் ஆணையாளராக கடந்த நான்கு மாதமாக பணியாற்றி வந்த அவர், பெங்களூரு கோரமங்கலாவில் உள்ள தனது வீட்டில் நேற்று முன்தினம் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் நேற்று ஆம்புலன்ஸ் மூலம், தும்கூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான தொட்டகொப்பலுக்கு கொண்டு சென்று இரவு 9.30 மணிக்கு முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இதனிடையில் அதிகாரி ரவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் அதுபற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று நேற்று சட்டசபை மற்றும் மேலவையில் பாஜ மற்றும் மஜத கட்சி எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு பதிலளித்த முதல்வர் சித்தராமையா, ஐஏஎஸ் அதிகாரி மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை அவசியமில்லை. கர்நாடக சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிடுவதாக தெரிவித்தார். முதல்வரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டசபை மற்றும் மேலவையில் தர்ணா போராட்டம் நடத்தினர். நேற்றிரவு 9 மணியளவில் முதல்வர் சித்தராமையா நேரில் சென்று தர்ணா போராட்டத்தை கைவிடும்படி கேட்டார். சி.பி.ஐ. விசாரணைக்கு விடுவதாக உறுதியளித்தால் மட்டுமே தர்ணா போராட்டம் கைவிடுவோம் என்று உறுதியாக தெரிவித்தனர். அதற்கு சித்தராமையா பதில் கொடுக்காததால் இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் காகோடு திம்மப்பா, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எம்.எல்.ஏக்களை நேரில் சந்தித்து போராட்டத்தை கைவிட்டு, அவை கூட்டத்தில் பங்கேற்கும்படி கேட்டார். அவர்கள், மீண்டும் சி.பி.ஐ.விசாரணைக்கு வலியுறுத்தினர். அப்போது பேசிய திம்மப்பா, ‘உங்களின் செயல்பாடு எனக்கு மிகுந்த கவலை ஏற்படுத்துகிறது. அவை நேரத்தை வீணாக்கக்கூடாது. எந்த பிரச்னையாக இருந்தாலும் பேசி தீர்ப்பது தான் நல்லது. அவையில் இரவு முழுவதும் தர்ணா போராட்டம் நடத்துவது நாகரீகமானதல்ல. சட்டப்படியும் ஏற்கத்தக்கதல்ல. மக்கள் வரிப் பணத்தில் தான் சட்டசபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
அந்த மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் போராட்டத்தை கைவிட வேண்டும்' என்றார். ஆனால் சபாநாயகரின் கோரிக்கையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏற்காமல் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இன்று காலை 11.30 மணியளவில் சட்டசபை கூட்டம் தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சியினர் சிபிஐ விசாரணை கேட்டு அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மதியம் 3.00 மணிக்கு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.