புதுடெல்லி: கருப்பு பணம் பதுக்கினால் 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கியவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கும் வகையில் நடப்பு கூட்டத் தொடரில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பட்ஜெட் தாக்கலின் போது மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்திருந்தார்.வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்குவதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவில் வெளிநாடுகளில் சொத்து வாங்கியவர்கள் அது தொடர்பான விவரங்களை மத்திய அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அல்லது இதன் மூலம் பலன் பெறுபவர்கள் இதுதொடர்பான விவரங்களை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.அவ்வாறு வெளிநாடுகளில் வாங்கி குவித்துள்ள சொத்து மற்றும் வருவாய் குறித்து மத்திய அரசுக்கு கணக்கு தாக்கல் செய்ய தவறுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் இந்த மசோதாவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கணக்கில் வராத சொத்துக்களுக்கு 300 சதவீதம் வரை அபராதம் விதிக்கவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இந்த மசோதாவை நடப்பு கூட்டத்தொடரிலேயே அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.