திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் பணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, தேவஸ்தான அனைத்துத்துறை அதிகாரிகளும் கூண்டோடு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தலைமுடியை காணிக்கை செலுத்தி வருகின்றனர். இதற்காக 4 பெரிய கல்யாண கட்டா (தலைமுடி காணிக்கை செலுத்துமிடம்), 15 சிறிய கல்யாண கட்டா உள்ளது. இவற்றில் நிரந்தர சவர தொழிலாளர்களாக 281 பேர் உள்ளனர். ஒப்பந்த முறையில் ஆண் மற்றும் பெண் சவர தொழிலாளர்கள் 302 பேர் பணியாற்றுகின்றனர். கூட்டம் அதிகமாக உள்ள நேரத்தில் தேவை என்ற முறையில் சவர தொழிலாளர்களாக 872 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்திலோ மொட்டையடிக்க நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தலைமுடி காணிக்கை செலுத்தும் இடத்தில் பக்தர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக பக்தர்களிடம் இருந்து அடிக்கடி புகார்கள் வந்தது. இங்கு பணியாற்றும் அனைவரும் பக்தர்களிடம் கட்டாயமாக பணம் வசூலிக்க வேண்டும் என பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளும், கண்காணிப்பு அதிகாரிகளும் தொழிலாளர்களுக்கு உத்தரவிட்டது தெரியவந்தது.இதுதொடர்பாக கல்யாண கட்டா துணை செயல் அலுவலராக இருந்த கிருஷ்ணாரெட்டி, உதவி செயல் அலுவலர் அசோக்குமார், கண்காணிப்பாளர் ரங்கபாபு ஆகியோரை பணியிடமாற்றம் செய்து தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ் உத்தரவிட்டார். மேலும் பல்வேறு துறைகளில் உள்ள கண்காணிப்பு அலுவலர்களை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கல்யாண கட்டா துணை செயல் அலுவலராக இருந்த கிருஷ்ணாரெட்டியை காத்திருப்போர் பட்டியலிலும், பொது பிரிவில் இருந்த பேபி சரோஜினியை கல்யாண கட்டா துணை செயல் அலுவலராகவும், போர்ட் செல் துணை செயல் அலுவலர் முனிரத்தினம்ரெட்டி, பொது துணை செயல் அலுவலராகவும் நியமிக்கப் பட்டனர். கோயிலில் இருந்த உதவி செயல் அலுவலர் ராமமூர்த்தி, சீனிவாசம் பக்தர்கள் ஓய்வறைக்கும் கோயிலில் இருந்த சிவாரெட்டியை விஷ்ணு நிவாசம் ஓய்வறைக்கும், வைகுண்டத்தில் இருந்த பிரபாகர், கோயில் உதவி செயல் அலுவலராகவும், மாற்றப்பட்டனர். அவுட்சோர்சிங் பிரிவில் இருந்த லோகநாதன் கோயில் உதவி செயல் அலுவலராகவும், கல்யாண பிரிவு உதவி செயல் அலுவலர் நாகராஜூ கல்யாண கட்டா உதவி செயல் அலுவலராகவும், விஷ்ணு நிவாசம் பக்தர்கள் ஓய்வறை பிரிவில் இருந்த வேணுகோபால்ரெட்டி வைகுண்டம் உதவி செயல் அலுவலராக மாற்றப்பட்டுள்ளனர்.