விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே சிவன்கோயிலுக்கு வந்த நடிகை சுகன்யா, தனது கனவில் வரும் கடவுள் சிலைகளை தோண்டி எடுக்குமாறு கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே திருநந்திபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த செம்மனேரி ஆண்டவர் கோயில் மற்றும் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயில் பிரபல நடிகை சுகன்யாவின் குலதெய்வம் என்று கூறப்படுகிறது. சுகன்யா மற்றும் அவரது குடும்பத்தினர் அடிக்கடி இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று காலை 9.30 மணிஅளவில் சுகன்யா தனது உறவினர்களுடன் செம்மனேரி ஆண்டவர் கோயிலுக்கு வந்தார். இதனை அறிந்த ஊராட்சி தலைவர் பழனியம்மாள் பழனிசாமி, துணை தலைவர் முருகன் மற்றும் பொதுமக்கள் கோயிலுக்கு விரைந்தனர். அவர்களிடம் பேசிய சுகன்யா, இக்கோயில் எதிரே உள்ள ஆலமரத்தின் அடியில் மண்ணில் சிலைகள் உள்ளது போல் எனக்கு அடிக்கடி கனவு வருகிறது. அதனால் இவ்விடத்தில் பள்ளம் தோண்டி பார்க்க வேண்டும், பொக்லைன் இயந்திரத்தை கொண்டுவர ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து ஊராட்சி தலைவர், பெரியதச்சூர் போலீசாருக்கும், இந்து அறநிலையத்துறை செயல் அலுவலருக்கும் தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக பெரியதச்சூர் சப்-இன்ஸ்பெக்டர் மோகனமுத்து, இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் கோயிலுக்கு விரைந்தனர். அவர்கள் நடிகை சுகன்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வருவாய் துறையினரின் அனுமதி பெற்ற பிறகு தான் பள்ளம் தோண்ட முடியும், நீங்கள் வருவாய்துறையினரிடம் அனுமதி பெற்று வாருங்கள் என்று அவரிடம் தெரிவித்தனர். இதையடுத்து நடிகை சுகன்யா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.