திருச்சி- திருச்சி விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பிடிபட்டுள்ளது. இதுசம்பந்தமாக 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு ஏர் இந்தியா விமானம் நேற்று வந்தது. விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர் கேரளாவை சேர்ந்த 3 பேர் கொண்டு வந்த சூட்கேஸ்களை ஸ்கேனர் மூலம் சோதனை செய்தபோது எச்சரிக்கை ஒலி கேட்டது. இதையடுத்து, அந்த 3 சூட்கேஸ்களை திறந்து அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் ஒரு சூட்கேசின் கவரில் 464 கிராம் தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.12.18 லட்சம். 2வது சூட்கேசில் வைத்திருந்த சைக்கிள் பெடலில் 465 கிராம் தங்கம் இருந்தது. இதன் மதிப்பு ரூ.12.21 லட்சம். 3வது பெட்டியில் ஜீன்ஸ் பட்டனில் 692 கிராம் தங்கம் இருந்தது. இதன் மதிப்பு ரூ.18.17 லட்சம். இவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்திவந்தது கேரள மாநிலம் காசரக்கூடுவை சேர்ந்த அப்துல்சலாம், உமேஷ், முகமதுஇன்ஜில் அப்துல்லா என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர்களை கைது செய்துள்ளனர்.
இதேபோல் நேற்றிரவு மலேசியாவில் இருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் வந்தது. இதிலிருந்து இறங்கிய பயணி ஒருவரின் நடையில் சந்தேகம் ஏற்படவே, அவரை தனி அறையில் வைத்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது ஆசனவாயில் 300 கிராம் தங்கம் மறைத்துவைத்திருந்தார். விசாரணையில், அவர் ராமநாதபுரம் திருவாடானை சேர்ந்த ஜகுபர்அலி என்பது தெரியவந்தது. அவர் கடத்திவந்த தங்கத்தின் மதிப்பு ரூ.7.88 லட்சம். தங்கத்தை பறிமுதல் செய்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பிடிபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.