சவர தொழிலாளர்கள் தட்டுப்பாடு திருப்பதியில் மொட்டையடிக்க பல மணிநேரம் பக்தர்கள் காத்திருப்பு
திருமலை: உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து தினந்தோறும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பக்தர்கள் வரை வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக தங்களால் இயன்ற தலைமுடி காணிக்கை செலுத்துகின்றனர். அதன்படி ஒரு நாளைக்கு 30 ஆயிரம் பக்தர்கள் வரை தலைமுடி காணிக்கை செலுத்திவருகின்றனர். அதன்படி பக்தர்கள் மொட்டை அடிக்கும் (தலைமுடி காணிக்கை செலுத்தும் கல்யாண கட்டாவில்) 1992 திருமலை, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 600 நிரந்தர சவர தொழிலாளர்களை நியமனம் செய்தது. இதில் பலர் தற்போது ஓய்வு பெற்றுள்ளனர். அதன்பிறகு 1998ம் ஆண்டு ஒரு மொட்டைக்கு 2 ரூபாய் வீதம் வழங்கும்படி ஒப்பந்தம் செய்து 200 பேர் ஒப்பந்த ஊழியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கடந்த 2007ம் ஆண்டு இதேபோன்று 110 ஆண் சவர தொழிலாளர்களும், 60 பெண் சவர தொழிலாளர்களும் நியமிக்கப்பட்டனர். இருப்பினும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால் பக்தர்கள் மொட்டை அடிக்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதால் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதனை கருத்தில் கொண்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 315 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இவர்கள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் மட்டும் 2 சுற்றுகளாக மொட்டை அடிக்க நியமிக்கப்படுகின்றனர். இதில் ஒரு சுற்றில் 215 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் விடுமுறையில் செல்பவர்கள் என கழித்தால் 200 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு ஸ்ரீவாரி சேவா சேவை முறையில் சவர தொழிலாளர்கள் 840 தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்கள் கூட்டம் அதிகமாக உள்ளபோது மட்டுமே 15 நாட்களுக்கு ஒருமுறை நியமிக்கப்பட்டு வந்தனர். தற்போது இவர்களும் பணியில் இல்லாதால் தலைமுடி காணிக்கை செலுத்தும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவாரி சேவா திட்டத்தின் கீழ் சவர தொழிலாளர்கள் மொட்டை அடிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அவர்களும் கூட்ட நெரிசலை சாதமாக கொண்டு தலைமுடி காணிக்கை செலுத்த கட்டாயமாக பணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். எனவே காலியாக உள்ள சவர தொழிலாளர்கள் பணியிடங்களை நிரப்ப தேவஸ்தான நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.