சென்னை: சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து, சட்டக்கல்லூரி மாணவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், மாணவர்கள் நேற்று நடத்திய சாலை மறியல் போராட்டத்தினால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதனால், மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி, அவர்களை கலைத்தனர்.இந்த நிலையில், சென்னை ஐகோர்ட் மூத்த நீதிபதி சதீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.வேணுகோபால் ஆகியோர் முன்பு வக்கீல்கள் சிலர் ஆஜராகி, ‘டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியை சென்னை புறநகர் பகுதிக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கல்லூரியை இடம் மாற்றம் செய்யும் முடிவை கைவிட வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளருக்கு மாணவர்கள் கோரிக்கை மனுவை கொடுத்தும் இதுவரை பரிசீலிக்கவில்லை’ என்று வாதிட்டார்கள்.இதற்கு நீதிபதிகள், ‘கோரிக்கை மனுவை நேற்றுதான் மாணவர்கள் கொடுத்துள்ளனர். அந்த மனுவை பரிசீலிக்க அரசு அதிகாரிகளுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். அதற்குள் ஐகோர்ட்டை நாடுவது சரியல்ல' என்றனர். 'தினகரனி'ல் வெளியான மாணவர்கள் போராட்டம் தொடர்பான செய்தியை வக்கீல்கள் நீதிபதியிடம் காட்டினர். இதைப் பார்த்த நீதிபதிகள், 'சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு, உடனடியாக கல்லூரிக்கு திரும்பவேண்டும்’ என்றனர்.