நெல்லை: சென்னையிலிருந்து நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் நெல்லை - நாகர்கோவில் பாசஞ்சர் ரயில்கள் இன்று முதல் மின்பாதைகளில் இயக்கப்படுகின்றன. மின் பாதையில் வந்த ரயில்களுக்கு நெல்லை பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.தமிழகத்தின் தலைநகரான சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை ரயில் பாதை மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்று விட்டன. தென்மாவட்டங்களில் இறுதியாக கடந்த மாதம் நெல்லை முதல் விருதுநகர் வரையிலான ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மிட்டல் இதனை ஆய்வு செய்து மின்சார பாதையில் ரயில்களை இயக்கலாம் என அனுமதி வழங்கினார்.
இதன் அடிப்படையில் தென்மாவட்டங்களில் முதல் முறையாக திருச்சியில் இருந்து நெல்லை வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கடந்த 23ம் தேதி மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்பட்டது. அதை தொடர்ந்து நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி, அனந்தபுரி, குருவாயூர் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களையும் மின்பாதையில் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் இன்று (3ம் தேதி) முதல் நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி, குருவாயூர் உள்ளிட்ட 4 எக்ஸ்பிரஸ் ரயில்களும் இரு வழித்தடத்திலும் மின்சார இன்ஜின் பொருத்தி இயக்கப்படுகின்றன.
இவற்றோடு நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் பாசஞ்சர் ரயிலும் இன்று முதல் மின்சார இன்ஜின் பொருத்தி இயக்கப்படுகிறது. இருப்பினும் இப்போதைக்கு பயணநேரத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது. ரயில்வே கால அட்டவணை வெளியான பின்னர், ரயில்களின் வேகத்தை கூட்டி பயண நேரத்தை மிச்சப்படுத்த வாய்ப்புள்ளது.இன்று காலை மின்பாதையில் நெல்லை வந்த கன்னியாகுமரி, குருவாயூர், அனந்தபுரி, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் நாகர்கோவில் பயணிகள் ரயிலையும் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.