ஆபாச இணையதளங்களுக்குதடை விதிக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே நந்தினி என்ற பள்ளி சிறுமியும், வேலூர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த கிருத்திகா என்ற பள்ளி சிறுமியும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது. இது தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் அவலம். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மதுபழக்கத்துக்கு அடிமையாவது அதிகரித்து வருகிறது. செல்போனிலும், கணினிகளிலும் பாலுறவு காட்சிகளை கொண்ட இணையதளங்களால் இளைஞர்கள் பாதை தவறும் நிலை ஏற்பட்டுள்ளது. குடியாத்தம் கிருத்திகாவை பாலுறவுக்கு கட்டாயப்படுத்திப் படுகொலை செய்த மாணவன் இணையதளங்களில் காட்சிகளைப் பார்க்க கூடியவன் என்று கூறப்படுகிறது. அவனுக்கு குடிப்பழக்கமும் உண்டு என்று விசாரணையில் தெரிய வருகிறது. அரபு நாடுகளில் பாலுறவு அடங்கிய இணையதளங்களை 100 சதவீதம் தடை செய்துள்ளனர். இந்திய அரசு அத்தகைய இணையதளங்களுக்கு ஏன் தடைவிதிக்க கூடாது. மதுபான கடைகளை அரசு உடனடியாக மூட வேண்டும். பாலுறவு இணையதளங்களை தடை செய்ய வேண்டும். மதுவிலக்கு என்பது இந்திய அரசின் தேசியக் கொள்கையாக அறிவிக்கப்பட்டு அரசு மதுபான கடைகளை உடனடியாக இழுத்து மூட வேண்டும். அதற்கான சட்டத்தையும் இந்திய அரசு இயற்ற வேண்டும்.