சென்னை: பேராசிரியர் க.அன்பழகனின் 93வது பிறந்தநாளுக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:ஒவ்வொருவரும் “மணிவிழா“ என்ற பெயரால், தங்களின் அகவை 60 முடிகிற போது விழா கொண்டாடி மகிழ்கிறார்கள். ஆனால் எனக்கும், திமுக பொதுச் செயலாளர் பேராசிரியருக்கும் நட்பு முகிழ்த்ததற்கே ஒரு மணி விழா கொண்டாட வேண்டும். 1942ம் ஆண்டு திருவாரூர், விஜயபுரத்தில் நடைபெற்ற இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்து நடத்திய சிக்கந்தர் விழா ஒன்றில் கலந்து கொள்ள அண்ணா வந்த போது, அந்த விழாவுக்கு நானும் சென்றிருந்தேன்.
இறுதியாக அண்ணாவைப் பேசுவதற்காக அழைத்த நேரத்தில், அண்ணா அவர்கள் எழுந்து, “நான் பேசுவதற்கு முன்பு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர் ஒருவரை நான் அழைத்து வந்திருக்கிறேன், அவர் உங்கள் முன்னால் பேசுவார்“ என்ற அறிமுகத்தோடு ஒரு இளைஞரை அங்கே பேச வைத்தார். அந்த இளைஞர் தான் இன்று 93வது பிறந்த நாள் காணும் அன்பழகனார்! முதன் முதலாக அங்கே தான் நான் பேராசிரியர் அவர்களைச் சந்தித்து அறிமுகம் செய்து கொண்டேன்.அப்போது எங்களிடையே முகிழ்த்த நட்பு தான், எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள், இன்ப துன்பங்கள் ஆகியவற்றுக்கிடையே “மணிவிழா“ கண்டு அதற்கு மேலும் இரண்டாண்டுகள் கடந்து, அவருக்கு நானும், எனக்கு அவரும், இருவரும் சேர்ந்து நம்முடைய கழகத்துக்கு துணையாகவும் இருந்து நடத்தி வருகிறோம்.
இந்த வயதிலும் நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, நிதானமான போக்கு, நேர்மையான சிந்தனை, தன் மனதில் பட்ட கருத்தை மறைக்காது எடுத்துரைக்கும் திறந்த நெஞ்சம், ஆபத்து தமிழுக்கோ, தமிழ் இனத்துக்கோ என்றால் அனலாகக் கொதிக்கின்ற உள்ளம், எதிர் தரப்பினரை சுழற்றி அடிக்கும் வாள் வீச்சென வாயிலிருந்து பிறக்கும் “சுளீர்! சுளீர்!“ என்ற வார்த்தைகள் பேராசிரியருக்கே சொந்தமானவை. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அறிஞர் அண்ணா கண்டெடுத்த கொள்கை முத்துக்களில் ஒன்றே பேராசிரியர் அன்பழகன்.
பேராசிரியருக்கு 93வது பிறந்த நாள் தமிழுக்கு முடிசூட்டுகின்ற நாள் தன்மான உணர்வுக்கு மகுடம் புனைகின்ற நாள் திராவிட மக்கள் மட்டுமல்ல உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் ஒவ்வொருவரும், தமிழர்களின் வெற்றிக்காக, உரிமைக்காக குரல் கொடுப்போம் என்று சூளுரைக்கின்ற நாள் இந்த நாள் என்று கூறி, மேலும் பல்லாண்டுகள் பேராசிரியப் பெருந்தகையே, கழகம் வாழ, நீ வாழ்க வாழ்க என்று மனமார வாழ்த்துகின்றேன்.