சென்னை: சென்னை ஐஐடியில் கூடுதல் ஹாஸ்டல் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஹாஸ்டல் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. சென்னை ஐஐடியில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஐஐடியில் போதிய ஹாஸ்டல் வசதியில்லாததால் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், ஹாஸ்டல் கட்டுவதற்கான பணிகளை ஐஐடி நிர்வாகம் தொடங்கிய போது, சுற்றுசூழல் ஆர்வலர்கள் சிலர், ஐஐடி செயல்படும் இடம் ஒரு வனப்பகுதி. அதில் கூடுதல் கட்டிடங்கள் கட்டும்போது, வன அழிவு ஏற்படுவதுடன், வனவிலங்குகளும் பாதிக்கப்படும் என்று வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த 1950ம் ஆண்டு இந்த பகுதியில் ஐஐடி தொடங்கப்பட்ட போது இது வனப்பகுதி அல்ல என அப்போது அரசால் அறிவிக்கப்பட்டது. இதனை ஐஐடி நிர்வாகம் கோர்ட்டில் தெரிவித்தது. இதை தொடர்ந்து ஐஐடி பகுதியில் 2 ஹாஸ்டல் கட்டிடங்கள் மற்றும் ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. எனினும், மேற்கொண்டு கட்டிடங்கள் கட்டுவதற்கு வழங்கப்பட்ட தடை இன்னும் நீடிக்கிறது. இது தொடர்பாக ஐஐடி அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஐஐடியில் 3 கட்டிடங்கள் கட்ட அனுமதி கிடைத்துள்ளது. எனினும், ஐஐடிக்கு தேவையான மற்ற கட்டிடங்களை கட்டுவதற்கான அனுமதி பெற முயற்சித்து வருகிறோம். இப்போது நடைபெற்று வரும் கட்டுமான பணியில் மாணவிகளுக்கான ஹாஸ்டல் பணி ஒரு மாதத்தில் முடிவடையும். இதில், 550 மாணவிகள் தங்கிக்கொள்ளலாம். மாணவர்களுக்கான ஹாஸ்டல் கட்டுமான பணி 3 மாதத்தில் முடிவடைந்துவிடும். பின்னர், இதில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.