நெல்லை: நெல்லை பேட்டையை அடுத்த திருப்பணிகரிசல்குளம் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் பத்மநாபன். மும்பையில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரது மனைவி பேபி என்ற விஜயா (41). இவர்களுக்கு கோகுல்ராஜ் (21), சோனேஸ்வரன் (17) ஆகிய 2 மகன்கள். அழகுக்கலை பயிற்சி (பியூட்டிசியன்) முடித்துள்ள விஜயா, மணப்பெண் அலங்காரம் மற்றும் சடங்கு நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவார்.விஜயாவின் சகோதரி விமலா தனது கணவர் கணேசனுடன் வெளிநாட்டில் இருக்கிறார். இவர்களது வீடு பாளை சமாதானபுரம் செழுஞ்சுடர் தெருவில் உள்ளது. இவர்களது மகள் அனிதா நெல்லையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் எம்இ படிக்கிறார். கணவன், மனைவி இருவரும் வெளிநாட்டில் இருப்பதால் மகளை கவனித்துக் கொள்வதற்காக சகோதரி விஜயாவை சமாதானபுரத்தில் உள்ள தனது வீட்டில் தங்கியிருக்குமாறு விமலா கூறியிருந்தார்.
இதையடுத்து, கடந்த 2 மாதமாக விஜயா, தனது மகன்களுடன் இங்கு வந்து தங்கியிருந்தார். விமலாவின் வீட்டு மாடியில் இவர்கள் தங்கியிருந்தனர். அவர்களுடன் அனிதாவும் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். இந்நிலையில், நேற்று மதியம் 1 மணிக்கு மகன் கோகுல்ராஜ் தாய் விஜயாவின் அறையை திறந்தபோது, அவர் ஆடைகள் கலைந்த நிலையில் அலங்கோலமாக ரத்த வெள்ளத்தில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இதுகுறித்து அவர் உடனடியாக பாளை போலீசிற்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த பாளை போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, அவரது செல்போன்களில் இறுதியாக வந்த எண்களை கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். விஜயா மணப்பெண் அலங்காரத்திற்கு சென்று வந்த இடங்களில் அவருக்கு பலருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு சில ஆண்கள், அலங்கார நிகழ்ச்சிகளுக்கு ஆர்டர் கொடுப்பதற்காக அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். இதில் யாராவது ஒருவர் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கள்ளக்காதல் தொடர்பாகவும் இக்கொலை நடந்திருக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.