உடலில் வைக்கோலை சுற்றி நேர்த்திக்கடன்: மேலூர் கோயிலில் வினோத திருவிழா: ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்
மேலூர்: ஆண்கள் தங்கள் உடலில் வைக்கோல் பிரியை சுற்றிக் கொண்டும், பெண்கள் தங்கள் தலையில் மதுக்கலயங்களை ஏந்திக் கொண்டு, கைகளில் உருவ பொம்மைகளை சுமந்து கொண்டும் நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத வைக்கோல் பிரி திருவிழா மேலூர் கோயிலில் நடைபெற்றது. மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள வெள்ளலூர் பகுதியில் 58 கிராமங்கள் உள்ளன. வெள்ளலூரில் ஏழை காத்தம்மன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் கொண்டாடப்படும். கடந்த 15 நாட்களுக்கு முன்பு 11 கரைகளை சேர்ந்த 22 அம்பலகாரர்கள், 22 இளங்கச்சிகள் முன்னிலையில் அம்மனாக வழிபட கூடிய 7 சிறுமிகளை கோயில் பூசாரி தேர்வு செய்தார். தேர்வு பெற்ற அந்த 7 சிறுமிகளும், இந்த 15 நாட்களும் இரவில் கோயிலில் தங்கி, பகலில் 58 கிராம மக்களுக்கு ஆசி வழங்கினர்.
கிராம மக்களும் அச்சிறுமிகளை தெய்வமாகவே எண்ணி வணங்கி வந்தனர். திருவிழாவின் நிறைவு நாளான நேற்று ஆண்கள் தங்கள் உடலில் வைக்கோல் பிரியை சுற்றிக் கொண்டு, முகங்களில் பல்வேறு விதமான முகமூடிகளை அணிந்து கொண்டும் ஊர்வலமாக சென்றனர். இதேபோல் விரதம் இருந்த பெண்கள் தங்கள் தலையில் மதுக்கலயத்தை ஏந்திக் கொண்டு கோயில் முன்பு இருந்து ஊர்வலமாக கிளம்பினர். இளம்பெண்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக விதவிதமான மண் பொம்மைகளை கைகளில் சுமந்து கொண்டு சென்றனர். ஊர்வலத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, 7 கிமீ தொலைவில் உள்ள குறிச்சிபட்டி சின்ன ஏழைகாத்தம்மன் கோயிலில் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.