ஜெயலலிதாவுக்கு சிறை கண்டித்து ஒன்றிய கூட்டத்தில் மொட்டையடித்த அதிமுக கவுன்சிலருக்கு கடும் எதிர்ப்பு
விருத்தாசலம்: விருத்தாசலம் ஒன்றிய குழு கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் மொட்டை அடித்துக் கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, தேமுதிக, பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விருத்தாசலம் ஒன்றிய குழு கூட்டம் சேர்மன் சுந்தரராஜன் தலைமையில் நேற்று நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணசாமி, மேலாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் அதிமுக கவுன்சிலர் அருள், ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி பேசினார். இதற்கு தேமுதிக கவுன்சிலர் சரவணன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அதிமுக, தேமுதிக கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அதிமுக கவுன்சிலர் அருள், கூட்ட அரங்கிலேயே மொட்டை அடித்துக் கொண்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக, தேமுதிக, பாமக கவுன்சிலர்கள், ஒன்றிய துணை சேர்மன் வெங்கடேசன் உள்ளிட்டோர் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினர். பின்னர் அவர்கள் விருத்தாசலம் - கடலூர் சாலையில் ஒன்றிய அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் மறியலில் ஈடுபட்ட கவுன்சிலர்களை சமாதானப்படுத்தினர். இதனால் 15 நிமிடம் போக்குவரத்து தடைப்பட்டது. தொடர்ந்து ஒன்றிய குழு கூட்டம் சுமூகமாக நடந்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.