நாங்குநேரி: வகுப்பறையில் குறும்பு செய்ததை செல்போனில் படம் பிடித்த ஆசிரியையின் கன்னத்தில் 10ம் வகுப்பு மாணவர் ஓங்கி அறைந்த சம்பவம் நாங்குநேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் காலை 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம்போல் சிறப்பு வகுப்பு நடந்தது. அப்போது ஒரு மாணவர், சக மாணவனிடம் மீசையை முறுக்குவது போல் முகத்தில் கையை வைத்து முறுக்கி காட்டி குறும்பு செய்தார். இதை பார்த்த ஆசிரியை தனது செல்போன் மூலம் படம் பிடித்து அந்த மாணவரிடம் காண்பித்தார்.
உடனே அந்த மாணவர் ‘படம் தெளிவாக இல்லை. எனவே மீண்டும் ஒருமுறை செல்போனில் என்னை படம் பிடியுங்கள்’ என்று ஆசிரியையிடம் கூறியுள்ளார். அதற்கு ஆசிரியை மறுக்கவே, அந்த மாணவர் நாளை நான் பள்ளிக்கு செல்போன் கொண்டுவந்து படமெடுத்து காட்டுகிறேன் என கூறியுள்ளார். இதையடுத்து பள்ளிக்குள் செல்போன் கொண்டு வரக் கூடாது என ஆசிரியை அவரை கண்டித்துள்ளார். ‘நீங்கள் மட்டும் செல்போன் வைத்துள்ளீர்களே?’ என ஆசிரியையிடம் மாணவர் எதிர்த்து பேச அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. என்னிடம் எதிர்த்து பேசுகிறாயா எனக் கூறி ஆசிரியை மாணவரின் கன்னத்தில் அடித்துள்ளார்.
மறு வினாடியே சற்றும் எதிர்பாராத வகையில் பதிலுக்கு அந்த மாணவரும் ஆசிரியையின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையவே அவர் அணிந்திருந்த கண்ணாடி கீழே விழுந்து நொறுங்கியது.இதை பார்த்து வகுப்பிலிருந்த சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அறை வாங்கிய ஆசிரியையும் நிலைகுலைந்தார். உடனே அங்கு வந்த தலைமை ஆசிரியர் இருவரையும் அழைத்து கண்டித்தார். இதுகுறித்து மாணவனின் தந்தைக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். பள்ளிக்கு வந்த அவர் தனது மகனை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் கண்டித்ததுடன் தாக்கப்பட்ட ஆசிரியையிடம் மன்னிப்பு கேட்க செய்தார். மாணவர் அறைந்தது குறித்து ஆசிரியை போலீசில் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவம் பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாக்ஸ் செய்தி...அதிகாரிகள் கவனிப்பார்களா?பள்ளி வளாகத்தில் செல்போன் கொண்டு வரத் தடை எனத் தெரிந்தும் சில ஆசிரியர்கள் வரம்பு மீறி நடந்து கொள்கின்றனர். இதனால் மாணவர்களின் மனதிலும் செல்போன் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. எனவே கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளில் அடிக்கடி சோதனை நடத்தி பள்ளிகளில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்துதை தடை செய்ய வேண்டும்.