பதவி ஆசை போய் விட்டது: இனி தேர்தலில் போட்டியில்லை தேவகவுடா அறிவிப்பு
சிக்மகளுர்: எனக்கு வயதாகி விட்டதால் பதவி ஆசையும் போய் விட்டது. இனிமேல் நான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என முன்னாள் பிரதமர் தேவகவுடா அறிவித்துள்ளார்.கர்நாடகாவில் உள்ள சிக்மகளுர் அருகே நிரூகட்டா என்ற இடத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதன் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:சிக்மகளுர் பகுதியில் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. இங்கு பிரதான சாலைகளே குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. இவற்றை விரைவில் சீரமைக்க மாநில அரசு முன்வர வேண்டும். இங்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற காங்கிரஸ் தலைமையிலான முதல்வர் சித்தராமையா அரசு தவறினால் எனது கட்சி சார்பில் அவரை கண்டித்து போராட்டம் நடத்துவோம். மக்களுக்கு சேவை செய்ய மட்டுமே அரசியலில் நீடித்து வருகிறேன். எனக்கு வயதாகி விட்டது. பதவி ஆசையும் குறைந்து விட்டது. எனவே, இனிவருங்காலங்களில் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று முடிவு செய்துள்ளேன். மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் கட்சியை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.