மாஜி திமுக எம்எல்ஏ, மனைவிக்கு அரிவாள் வெட்டு
பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் முன்னாள் திமுக எம்எல்ஏ ஆலவயல் சுப்பையா. பொன்னமராவதி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தற்போது வசிக்கிறார். இவரது மனைவி ரத்தினம்(50). நேற்றிரவு வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது இவர்களது வீட்டின் அருகில் வசிக்கும் ராமசாமி, அவரது மகன்கள் பாலாஜி, முத்துராமன் ஆகியோர் தங்களை பற்றி ஜாடை பேசுவதாகக் கூறி, வீட்டிற்குள் புகுந்து சுப்பையாவையும், ரத்தினத்தையும் கம்பால் தாக்கி, அரிவாளால் வெட்டினர். பதிலுக்கு அவர்களும் ராமசாமி, பாலாஜி ஆகியோரை கட்டையால் சரமாரி தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த சுப்பையா, ரத்தினம் ஆகியோர் பொன்னமராவதி அரசு மருத்துவமனையிலும், ராமசாமி, பாலாஜி புதுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். இரு தரப்பினரும் பொன்னமராவதி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ராமசாமி (63), அவரது மகன்கள் பாலாஜி (25), முத்துராமன்(21) ஆகியோர் மீதும், எதிர் தரப்பில் சுப்பையா, அவரது மனைவி ஆகிய 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.