ராமநாதபுரம்: ராமநாதபுரத்தைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியை விற்பனை செய்வதற்காக ரவுடியிடம் கொடுத்து டீலிங் பேசிய விஷயம் அம்பலமாகியிருக்கிறது. இதையடுத்து எஸ்.ஐ.யை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட் டார்.ராமநாதபுரம் அருகே உள்ள குயவன்குடியை சேர்ந்தவர் டேவிட் (29). இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் ஓம் சக்தி நகரில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் கவுரவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கூலிப்படையாக செயல்பட்ட டேவிட் கைது செய்யப்பட்டார். பின்னர், ஜாமீனில் வெளிவந்தார்.
இந்நிலையில், கஞ்சா விற்பனை செய்ததாக நேற்று முன்தினம் கேணிக்கரை போலீசார் அவரை கைது செய்தனர்.அவரது செல்போனை போலீசார் சோதனை செய்தனர். அதில், ஒரு கைத்துப்பாக்கியின் படம் இருந்தது. விசாரணையில், அது கேணிக்கரை காவல்நிலைய எஸ்ஐ ஜெயபாலனின் கைத்துப்பாக்கி என்றும், அதனை விற்கச் சொல்லி தன்னிடம் எஸ்.ஐ.யும், ஏட்டு சுரேஷும் கடந்த 15.11.13ல் காட்டினர் என்றும் டேவிட் தெரிவித்தார். தற்போதும் அந்த துப்பாக்கி ஜெயபாலனின் வீட்டில் தான் உள்ளது என்றும் தெரிவித்தார். ஜெயபாலன் தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளார்.
இந்தத் தகவலையடுத்து, ஏடிஎஸ்பி வெள்ளைத்துரை தலைமையிலான போலீசார் பாரதி நகரில் உள்ள ஜெயபாலனின் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு சென்றனர். அங்கு நடந்த சோதனையில் 9 எம்எம் வகையை சேர்ந்த துப்பாக்கி சிக்கியது. இதில் 10 தோட்டாக்கள் வரை லோட் செய்ய முடியும்.ஜெயபாலனையும், ஏட்டு சுரேஷையும் பஜார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, இரவு முழுவதும் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், டவுன் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர் அனுமதியின்றி ஆயுதம் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்து, எஸ்ஐ ஜெயபாலனை போலீசார் கைது செய்தனர்.
எஸ்.ஐ.யிடம் நாட்டுத்துப்பாக்கி இருந்தது குறித்து ஏட்டு சுரேஷ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காததால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். எஸ்.ஐ ஜெயபாலனை சஸ்பெண்ட் செய்ய, எஸ்.பி மயில்வாகனன் டிஐஜி பாஸ்கரனுக்கு பரிந்துரை செய்துள்ளார். அதை ஏற்ற டிஐஜி, எஸ்ஐ ஜெயபாலனை சஸ்பெண்ட் செய்தார். எஸ்ஐ ஜெயபாலன் மே 28 முதல் மருத்துவ விடுப்பில் இருக்கிறார். இடையில் அவர் கீழக்கரை ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டும், இன்னும் பொறுப்பேற்காமல் உள்ளார். விசாரணையில், எஸ்ஐ ஜெயபாலன் மற்றும் ஏட்டு சுரேஷுக்கு, ராமநாதபுரத்தில் உள்ள முக்கிய ரவுடிகளுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது என ஏடிஎஸ்பி வெள்ளைத்துரை தெரிவித்தார்.