சமீப காலமாக அரசு துறைகள் நீதிமன்ற கண்டனங்களுக்கு உள்ளாவது என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. நீதிமன்ற கண்டனங்களை சாதாரணமாக எடுத்து கொள்ளும் மனநிலை உயர் அதிகாரிகளுக்கே வந்து விட்டது.நெல்லையில் வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டில் நிலம் வாங்கிய பலர் அதற்கான முழுத் தொகையையும் செலுத்திய பின்பும் அவர்களுக்கு கிரயப் பத்திரம் வழங்கப்படவில்லை. அவர்களில் பரமசிவம் என்பவர் உள்பட 5 பேர் மதுரை உயர்நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள். உயர்நீதின்றம் அந்த வழக்கை விசாரித்து அவர்களுக்கு மனையின் இறுதி விலையை உடனடியாக நிர்ணயித்து, கிரயப்பத்திரத்தை வழங்குமாறு வாரியத்துக்கு உத்தரவிட்டது. இதே போல், தொடர்ந்து 3 முறை நீதிமன்றம் உத்தரவிட்டும் பிரயோஜனம் இல்லை. கடைசியில் மனுதாரர்கள் நொந்து போய், நிர்வாக இயக்குனர் மற்றும் செயற்பொறியாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தனர்.
இப்போது அந்த வழக்கில் மனுதாரர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் இழப்பீடாக தர வேண்டும் என்றும், அந்த தொகையை நிர்வாக இயக்குனரும், செயற்பொறியாளரும் அபாராதமாக செலுத்த வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதில் பிரச்னை என்னவென்றால், தனியார் வர்த்தக நிறுவனங்கள் எந்த விஷயத்திலும் ஏதோ ஒரு முடிவை எடுத்து விடுகின்றன. ஆனால், அரசு நிறுவனத்தில் முடிவெடுக்க அதிகாரிகள் தயங்குகிறார்கள். வீட்டு வசதி வாரியம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நில ஆர்ஜிதம் செய்கிறது. அதற்கு இழப்பீடு போதாது என நில உரிமையாளர்கள் வழக்கு தொடுக்கிறார்கள். அது நிலுவையில் இருக்கும் போதே, வாரியம் அந்த நிலத்தை பிளாட் போட்டு மக்களுக்கு ஒதுக்கீடு செய்து விடுகிறது.
அப்போது, பிளாட் எவ்வளவு என்பதை தோராய விலையை மட்டும் நிர்ணயிக்கிறது. இறுதி விலையை அந்த இழப்பீடு வழக்கின் முடிவுக்கு பின்புதான் நிர்ணயிக்க முடியும் என்று கூறி, கிரயப் பத்திரத்தையும் வழங்காது. ஆனால், இழப்பீடு கோரும் வழக்குகள் ஆண்டு கணக்கில் தேங்கிக் கிடக்கும். அதனால், பிளாட்களுக்கு இறுதி விலையை வாரியம் நிர்ணயிக்காமல் தாமதம் செய்து கொண்டே இருக்கும். இதன் காரணமாக, பிளாட் வாங்கியவர்கள் எவ்வளவு தொகை செலுத்த முன் வந்தாலும் அவர்களுக்கு கிரயப் பத்திரம் கிடைக்காது. இது போன்று, எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் அதிகாரிகள் இருக்கும் போது, அரசாங்கம் ஏன் வர்த்தகங்களில் ஈடுபட வேண்டும்? கல்வி, மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளை தவிர மற்ற வர்த்தகங்களில் அரசு ஈடுபட்டால், அரசின் முக்கியப் பணிகளில் கவனம் போய் விடும். இது அரசுக்கும் நல்லதல்ல. மக்களுக்கும் நல்லதல்ல என்பதை அரசு உணர வேண்டும்.