சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் நள்ளிரவு இந்து முன்னணி மாஜி செயலாளர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பாட்டத்தூரைச் சேர்ந்தவர் ஜீவா என்ற ஜீவராஜ்(37). இந்து முன்னணி நகரச் செயலாளராக இருந்த இவரை 3 மாதத்திற்கு முன் கட்சி மேலிடம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்தது.இவரது முதல் மனைவி அய்யம்மாள். இவர்களுக்கு 2 பெண் குழந்தை, 2 ஆண் குழந்தை உள்ளனர். இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன் கரடிகுளத்தைச் சேர்ந்த சர்மிளாதேவி(28) என்பவரை 2வதாக ஜீவா திருமணம் செய்தார். சர்மிளாதேவி சங்கரன்கோவிலில் உள்ள நூற்பாலையில் வேலைபார்த்து வருகிறார். பாட்டத்தூர் மேற்கு பகுதியில் சமீபத்தில் கட்டிய புது வீட்டில் ஜீவா தனது இரு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.நேற்று கணவருடன் ஏற்பட்ட தகராறில் முதல் மனைவி அய்யம்மாள் கோபித்துக்கொண்டு அதே ஊரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். சர்மிளாதேவி இரவு ஷிப்ட் பணிக்கு சென்றார். குழந்தைகள் வீட்டிற்குள் தூங்கினர். ஜீவா வீட்டையொட்டி உள்ள முனீஸ்வரன் கோயில் முன்பு கட்டில் போட்டு தூங்கினார்.நள்ளிரவு அங்கு வந்த மர்ம கும்பல் கோயில் முன்பிருந்த விளக்கை அடித்து நொறுக்கினர்.
பின்னர் ஜீவா முகத்தில் மிளகாய் பொடி தூவினர். இதனால் எரிச்சல் ஏற்படவே அவர் அலறினார். உடனே தப்பி ஓட முயன்ற அவரை அந்த கும்பல் மடக்கிப்பிடித்து கோழி அறுப்பதுபோல் கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்றனர். தந்தையின் அலறல் சத்தம் கேட்டு மகன் வல்லரசு வெளியில் வந்து பார்த்தான். அங்கு தந்தை ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அழுதபடி வீட்டு வாசலில் மயங்கி சரிந்தான். இன்று காலை பணி முடிந்து வீடு திரும்பிய சர்மிளாதேவி கணவர் இறந்து கிடந்ததை கண்டு கதறினார்.தகவலறிந்ததும் போலீ சார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ஜீவா உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சங்கரன்கோவில் கழுகுமலை சாலையில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், இந்துக்களுக்கும் தகராறு இருந்து வந்தது. இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் உறவினர் வீட்டு அருகில் ஜீவா பிள்ளையார் கோயில் ஒன்று கட்டினார். அதன் அருகில் இந்து முன்னணி கொடி கம்பத்தையும் நட்டார். இதுபோல் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின்போது ஊர்வலம் நடந்தது. அப்போது இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதி வழியாக விநாயகர் சிலையை கொண்டு செல்ல ஜீவா முயன்றார். இதுபோல் மதப்பிரச்னையில் அவர் அடிக்கடி தலையிட்டு வந்தார். இந்நிலையில்தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.முதல் மனைவி இருக்கும்போது 2ம்திருமணம் செய்த காரணமாக ஜீவா கொலை செய்யப்பட்டாரா அல்லது மத பிரச்னையால் தீர்த்துக்கட்டினார்களா என விசாரணை நடக்கிறது. இந்து முன்னணி மாஜி செயலாளர் கொலையால் சங்கரன்கோவிலில் பதற்றமும் நிலவுகிறது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கொலையான ஜீவா மீது சங்கரன்கோவில் டவுன், தாலுகா ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட 12 வழக்குகள் உள்ளன.