ஆலந்தூர்: குடும்பம் நடத்திய வாலிபரை சேர்த்து வைக்க கோரி விவாகரத்து பெற்ற பெண் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் ஆதம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை புழுதிவாக்கத்தை சேர்ந்தவர் சுமலதா (33). விவாகரத்து பெற்றவர். ஆதம்பாக்கத்தில் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு ஆதம்பாக்கம் மகாலட்சுமி நகரை சேர்ந்த சதீஷ் (27) என்பவர் அடிக்கடி வந்து செல்வார். நாளடைவில் சுமலதாவுடன் சதீஷுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் சுமலதாவை திருமணம் செய்து கொள்வதாக சதீஷ் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் கடந்த 3 வருடங்களாக குடும்பம் நடத்தி வந்தனர்.இந்நிலையில் கடந்த மாதம் முதல் சுமலதா வீட்டுக்கு வருவதை தவிர்த்தார் சதீஷ். இது பற்றி சுமலதா விசாரித்தபோது, வேறு ஒரு பெண்ணுடன் சதீஷுக்கு திருமண ஏற்பாடு நடப்பது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அடைந்த சுமலதா, கடந்த வாரம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இது குறித்து விசாரணை நடத்த மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை திடீரென ஆதம்பாக்கம் மகாலட்சுமி நகரில் உள்ள சதீஷ் வீட்டுக்கு தனது தாயுடன் சுமலதா வந்தார். வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சதீஷ் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இது பற்றி தகவல் அறிந்த ஆதம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுமலதாவையும் அவரது தாயையும் மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, ‘சதீஷ் வீட்டு வாசலில் அமர்வது தவறு‘ என கூறி இருவரையும் வீட்டுக்கு அனுப்பினர். இது குறித்து சதீஷ் குடும்பத்தினரிடம் விசாரித்தபோது, இவர்களது குடும்பத்தில் ஒருவராக சுமலதா பழகியுள்ளார். சுமலதாவை அவர்களது மகளாக நினைத்துள்ளனர். அடிக்கடி வந்து சென்றதால் அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு பெருந்தொகை கடனாக சுமலதா பெற்றுள்ளார். அந்த பணத்தை திரும்ப செலுத்த முடியாத காரணத்தால் நிலப்பத்திரத்தை கொடுத்தள்ளார். அந்த நிலத்தை எடுத்து கொள்வார்களோ என்ற பயத்தில் பொய் புகார் கொடுத்துள்ளனர்‘ என்பது தெரியவந்தது.