நாகர்கோவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இலங்கை வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவலாம் என்று மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, குமரி மாவட்ட கடலோர பகுதிகளில் நேற்று இரவு முதல் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு கடல் வழியாக உள்ளே நுழைந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு பின்பு கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் 4 பேர், கடல் வழியாக தென் மாவட்டங்களுக்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், கடலோர பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்கும்படியும் மத்திய உளவு துறை தமிழக அரசுக்கு எச்சரிக்கை அனுப்பியுள்ளது. இதையடுத்து நேற்று இரவு முதல் குமரி உள்ளிட்ட தென் மாவட்ட கடலோர பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். தீவிர சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையில் 45க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்கள் உள்ளன. இவற்றில் தேங்காப்பட்டணம், சின்னமுட்டம், அஞ்சுகிராமம், குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கடலோர சோதனை சாவடிகள் உள்ளன. இந்த சோதனை சாவடிகளில் நேற்று இரவு முதல் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டனர். நேற்று மீன்பிடிக்க சென்று விட்டு இன்று அதிகாலையில் மீனவர்கள் கரை திரும்பினர். அவர்களிடமும் சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது சுற்றி திரிந்தார்களா என்று போலீசார் விசாரணை நடத்தினர். இந்த திடீர் சோதனை குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இலங்கையில் இருந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ சதி திட்டம் தீட்டி இருப்பதாக வந்த தகவலின்படி சோதனை நடத்த நேற்று இரவு உத்தரவிடப்பட்டது. குமரி மட்டுமின்றி தூத்துக்குடி, ராமேஸ்வரம் உள்பட கடலோர பகுதிகள் முழுவதிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது’ என்றார்.