சென்னை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு மேற்பார்வை குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா இன்று கடிதம் அனுப்பியுள்ளார். முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த 2006ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை கேரளா அரசு அமல்படுத்த மறுத்து, புதிய சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய, குழு அமைத்தது. இந்த குழுவில் கேரளாவை சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமசும் இடம் பெற்றிருந்தார். குழுவினர் அணையை ஆய்வு செய்து, உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில் அணை பலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கேரள அரசு சீராய்வு மனுவை கடந்த சில நாட்களுக்கு முன் தாக்கல் செய்தது.
இந்நிலையில், மத்திய நீர்வளத் துறை ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான மேற்பார்வை குழுவின் தலைவராக அணைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைமை பொறியாளர் எல்.ஏ.வி.நாதன் நியமிக்கப்பட்டுள்ளார். குழுவில், கேரள நீர்வளத் துறை செயலாளர் வி.ஜே.குரியன், தமிழக பொதுப் பணித் துறை செயலாளர் சாய்குமார் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட் கடந்த மே 7ம் தேதி பிறப்பித்த உத்தரவின் பேரில், மேற்பார்வை குழுவை அமைத்து மத்திய நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான ஆணை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 3ம் தேதி தங்களிடம் நான் அளித்த கோரிக்கை மனுவில் இதுகுறித்து குறிப்பிட்டிருந்தேன். எனது கோரிக்கையை ஏற்று மேற்பார்வை குழு அமைக்க உத்தரவிட்டுள்ள மத்திய அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.நடப்பு தென்மேற்கு பருவ மழை காலத்திலேயே, இந்த குழு சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுபடி முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.