விசாரணையில் பகீர் தகவல் பெண் உளவியல் நிபுணரின் சொத்துகளை அடைய கொலை
சென்னை: பெண் உளவியல் நிபுணர் பணம், நகைக்காக கொலை செய்யப்படவில்லை. அவரது சொத்துக்களை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கமிஷனர் ஜார்ஜ் கூறினார்.எழும்பூர் எத்திராஜ் சாலையில் டாங்கி அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் 7வது மாடியில் கிளினிக் நடத்தியவர் யம்மா (82). உளவியல் சிகிச்சை நிபுணரான இவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டார். அவரது கழுத்தில் கிடந்த செயின் மற்றும் 2 மோதிரம், லேப்டாப் மாயமானது. கொள்ளையர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இது குறித்து, கமிஷனர் ஜார்ஜ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
பணம் நகைக்காக யம்மா கொலை செய்யப்படவில்லை என்று எங்களது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொள்ளையடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொள்ளையர்கள் புகுந்திருந்தால், யம்மா கையில் கிடந்த தங்க வளையலையும் எடுத்துச் சென்றிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. யம்மாவுக்கு திருமணம் ஆகவில்லை. குழந்தைகளும் இல்லை. அவருக்கு பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. எனவே, அந்த சொத்தை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் அவரை தீர்த்துக் கட்டி உள்ளனர். கொலையாளியை நெருங்கி விட்டோம். விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என்றார்.