புதுடெல்லி:இந்தியாவில் சராசரியாக நான்கு நிமிடத்துக்கு ஒரு முறை ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக தேசிய குற்ற ஆவணங்கள் மையத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்தியாவில் தற்கொலை செய்து கொள்வோர் குறித்த புள்ளிவிவரங்களை தேசிய குற்ற ஆவணங்கள் மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த 2013ம் ஆண்டு இந்தியாவில் மொத்தம் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 799 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதாவது நாள் ஒன்றுக்கு 369 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. மொத்த தற்கொலையில் 12.3 சதவீதம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா, ஆந்திரபிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளன. மொத்த தற்கொலையில் 53.5 சதவீதம் இந்த 5 மாநிலங்களில் நிகழ்கிறது. குடும்ப பிரச்னை, காதல் தோல்வி,தீராத நோய் ஆகிய தற்கொலைக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. தற்கொலை செய்பவர்களில் 54 சதவீதம் பேர் 60 வயதை கடந்தவர்கள். 70.8 சதவீதம் பேர் திருமணமான ஆண்கள். 66.6 சதவீதம் பேர் திருமணமான பெண்கள். 6.2 சதவீதம் பேர் மாணவர்கள். பணக்கஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொள்பவர்கள் 38 சதவீதம். தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்பவர்கள் 39.8 சதவீதம். விஷம் குடிப்பவர்கள் 27.9 சதவீதம். தீக்குளிப்பவர்கள் 7.4 சதவீதம். பெரு நகரங்களை பொறுத்த வரை தற்கொலையில் சென்னை முதல் இடத்தில் உள்ளது. இங்கு கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 2450 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக பெங்களூரில் 2033பேரும், டெல்லியில் 1753 பேரும், மும்பையில் 1322 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.