புதுடெல்லி: நாடு முழுவதும் கட்டிடம் இடிந்து விழும் சம்பவங்களில் தினமும் சராசரியாக 7 பேர் உயிரிழப்பதாக தேசிய குற்ற ஆவண மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் கடந்த சனிக்கிழமையன்று, 50 ஆண்டு பழமையான 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் பலியானோர் எண்ணிக்கை நேற்று மாலை 10 ஆக உயர்ந்தது. இதே போல், சென்னையில் நேற்று முன் தினம் மாலை புதிதாக கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளிலிருந்து இதுவரை 16 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை வரை 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 120 பேர் வரை இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், நாடு முழுவதும் கட்டிட விபத்துகளில் சராசரியாக தினசரி 7 பேர் பலி ஆவதாக தேசிய குற்ற ஆவண மையம் தெரிவித்துள்ளது. இந்த மையத்தில் பதிவாகியுள்ள தகவலின்படி, கடந்த 2012ம் ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 2764 கட்டிட விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் மொத்தமாக 2682 பேர் உயிரிழந்துள்ளனர். 850 பேர் காயம் அடைந்துள்ளனர். கட்டிட விபத்துகளில் முதல் இடத்தில் இருப்பது உத்தரபிரதேசம். அந்த மாநிலத்தில் மட்டும் கட்டிட விபத்துகளில் 394 பேர் இறந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக, மத்திய பிரதேசத்தில் 284பேரும், ஆந்திர பிரதேசத்தில் 245 பேரும், பஞ்சாபில் 235 பேரும், மகாராஷ்டிராவில் 220 பேரும் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் 219 பேர் கட்டிட விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். தரம் குறைந்த கட்டுமானப் பொருட்களை பயன்படுத்துவதே கட்டிடம் இடிந்து விழுவதற்கு முக்கிய காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது.