பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவர் அஜீத்குமார் (19). வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இதே கல்லூரியில் புளியந்தோப்பை சேர்ந்த அரவிந்த்குமார் (19), பிஎஸ்சி வேதியியல் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இன்று காலையில் வழக்கம் போல மாணவர்கள் கல்லூரிக்கு வந்தனர்.காலை 10 மணியளவில் பிஎஸ்சி கணிதம், வேதியியல் பிரிவு மாணவர்களுக்கு பொதுவான ஒரு பாடத்தை ஆசிரியர் நடத்தி கொண்டிருந்தார். அப்போது அரவிந்த்குமார் (19) சத்தம் போட்டு பேசியுள்ளார். இதை அஜீத்குமார் தட்டி கேட்டுள்ளார். வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் மற்றும் சக மாணவ, மாணவிகள் விலக்கி விட்டுள்ளனர்.
இதனால் கோபத்தில் வீட்டுக்கு சென்ற அரவிந்த்குமார் சிறிது நேரத்தில் மீண்டும் கல்லூரிக்கு வந்தார். திடீரென அவர் அஜீத்குமாரின் மார்பு, தலையில் கத்தியால் சரமாரியாக வெட்டினார். அஜீத்குமார் ரத்தவெள்ளத்தில் அலறி துடித்தார். மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்து ஓடினர். இதன்பின், எம்.கே.பி. நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, எஸ்.ஐ.க்கள் கோபிநாத், விமலநாதன் ஆகியோர் விரைந்து வந்தனர். உயிருக்கு போராடிய அஜீத்குமாரை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆசிரியர் மற்றும் சக மாணவிகள் மருத்துவமனையில் குவிந்தனர். தகவல் அறிந்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.போலீசார் வழக்கு பதிந்து அரவிந்த்குமாரை கைது செய்தனர். முன் விரோதத்தினால் இந்த சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் இருக்குமா என தீவிரமாக விசாரிக்கின்றனர்.