தண்டையார்பேட்டை: திருவொற்றியூர் தனியார் பள்ளியின் 4வது மாடியிலிருந்து கீழே குதித்து பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டாள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை எண்ணூர் சிவகாமி நகர் 4வது தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (40) ஆட்டோ டிரைவர். மனைவி கோதை. இவர்களது மகள் வைஷ்ணவி (13), திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தாள்.தினமும் காலையில் பள்ளிக்கு செல்லும் வைஷ்ணவி, மாலை 3.30 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து விடுவாள். நேற்று, மாலை 4 மணியாகியும் வைஷ்ணவி வராததால் அவளது அம்மா பள்ளிக்கு சென்று பார்த்தார். அங்கு இல்லை. சக மாணவிகளிடம் விசாரித்தபோது, அவர்களும் பார்க்கவில்லை என கூறியுள்ளனர். இதனால் பதற்றத்துடன் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தார். அங்கும் வைஷ்ணவி பற்றி எந்த தகவலும் இல்லை. இதனால் பதற்றம் அதிகரித்தது. உடனே கணவருக்கு தெரியப்படுத்தி வரவழைத்தார்.இதையடுத்து இரவு 7.30 மணிக்கு உதயகுமாரும், கோதையும் மீண்டும் பள்ளிக்கு சென்று நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். உடனே ஆசிரியர்களும் விசாரித்து விட்டு ஒவ்வொரு வகுப்பறையாக தேடினர். 4வது மாடியில் உள்ள வகுப்பறைகளில் தேடியபோது திடீரென மொட்டை மாடியில் இருந்து ஒருவர் கீழே குதித்தார்.
பயங்கர அலறல் சத்தம் கேட்டது. உடனே உதயகுமார், கோதை மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்து கீழே ஓடி வந்தனர். பலத்த காயத்துடன் வைஷ்ணவி உயிருக்கு போராடி கொண்டிருந்தாள். அதை பார்த்ததும் பெற்றோர் கதறி துடித்தனர். ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனே வைஷ்ணவியை ஒரு வாகனத்தில் ஏற்றி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இரவு வைஷ்ணவி பரிதாபமாக இறந்தாள். இந்த சம்பவத்தை கேள்விபட்டதும் வகுப்பு ஆசிரியர்கள், சக மாணவர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து திருவொற்றியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிந்து, வீட்டில் பெற்றோர் திட்டியதால் வைஷ்ணவி கீழே குதித்து தற்கொலை செய்தாளா அல்லது ஆசிரியர்கள் யாராவது திட்டியதால் விரக்தியில் இந்த முடிவை எடுத்தாளா என்பது குறித்து விசாரிக்கின்றனர். பள்ளியில் உள்ள மொட்டை மாடிக்கு யாரும் செல்ல முடியாதபடி எப்போதும் பூட்டு போடப்பட்டிருக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். அப்படி இருக்கும்போது மொட்டை மாடிக்கு வைஷ்ணவி சென்றது எப்படி? பள்ளியிலேயே மறைந்திருந்து தற்கொலை செய்ய காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. இதற்கிடையே பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.