ஊத்துக்கோட்டை பஜாரில் எஸ்ஐ -வாலிபர் அடிதடியால் பரபரப்பு இருவரும் மருத்துவமனையில் அட்மிட்
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பஜாரில் நடுரோட்டில் போக்குவரத்து எஸ்ஐயும் வாலிபரும் சரமாரி தாக்கிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையின் மைய பகுதியான அண்ணா சிலை பகுதியில் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் அந்த இடத்தில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து போலீசார் நின்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவார்கள்.நேற்று மாலை போக்குவரத்து எஸ்ஐ நரசிம்மன், போலீஸ்காரர்கள் போக்குவரத்தை சரிப்படுத்திக்கொண்டு இருந்தனர். அப்போது அண்ணா சிலை அருகே நடுரோட்டில் நின்ற ஒருவரை எஸ்ஐ எச்சரித்துள்ளார். ஆனால் அந்த நபரோ, ரோட்டை விட்டு விலகிச்செல்லாமல் நின்றுள்ளார். கோபம் அடைந்த எஸ்ஐ நரசிம்மன் சென்று, அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தி உள்ளார். இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது அந்த நபர் திடீரென எஸ்ஐ நரசிம்மன் முகத்தில் குத்திவிட்டார். அங்கிருந்த போலீஸ்காரர்கள் ஓடிவந்து, அந்த நபரை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கினர். தலையில் படுகாயம் அடைந்த நபருக்கு ரத்தம் கொட்டியது. இது பார்த்து மக்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் சம்பவ இடத்துக்கு விரைந்தார். எஸ்ஐயை தாக்கிய நபரை கைது செய்து விசாரணை நடத்தினார். ஊத்துக்கோட்டை பழைய காவல்நிலையம் பின்புறத்தில வசித்து வரும் ஏழுமலை (40) என தெரிந்தது. இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வருகின்றார். இவரை ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் ஏழுமலைக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் எஸ்ஐ நரசிம்மனுக்கு சிகிச்சை பெற்று திரும்பினார்.இது குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.