அடையாறு ஆற்றில் குதித்து ஓய்வு பெற்ற அதிகாரி தற்கொலை
சென்னை: அடையாறு ஆற்றில் குதித்து ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி இன்று காலை தற்கொலை செய்து கொண்டார்.பெருங்குடி கந்தன் சாவடி சிபிஐ காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் திருநாவுக்கரசு (86). ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி. இவர், இன்று காலை தனது வீட்டில் இருந்து மயிலாப்பூர் நோக்கி காரில் புறப்பட்டார். காரை அந்தோணி என்பவர் ஓட்டினார். காலை 10.10 மணிக்கு கார் அடையாறு திரு.விக பாலத்தில் வந்து கொண்டு இருந்தது. அப்போது, திருநாவுக்கரசு திடீரென காரை நிறுத்தும்படி தனது டிரைவரிடம் தெரிவித்தார். சிறுநீர் கழிக்க போவதாக கூறி காரில் இருந்து இறங்கியவர் திடீரென அடையாறு ஆற்றில் குதித்தார். இதை சற்றும் எதிர்பாராத டிரைவர் அந்தோணி அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார்.இது குறித்து, தீயணைப்பு கட்டுப்பாட்டுத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. திருவான்மியூர், கிண்டி ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். ரப்பர் படகு மூலம் தேடுதல் வேட்டை நடந்தது. பின்னர், திருநாவுக்கரசு சடலமாக மீட்கப்பட்டார். அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.இது குறித்து, சாஸ்திரி நகர் போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர். முதல் கட்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக திருநாவுக்கரசு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்ததுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.