சேலம்: சேலம் மாநகராட்சியில் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.10 லட்சத்தில் மாதிரி வீடு கட்டப்படுவது, மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அனைத்து மக்களும் பின்பற்ற வேண்டும் என்பதற்காக உள்ளாட்சி நிர்வாகங்கள் மற்றும் பள்ளிகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சி பகுதியில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை பொதுமக்கள் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு வாகன பிரசாரம் துவங்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் மாநகர் முழுவதும் சென்று, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், மாநகராட்சியின் தற்காலிக அலுவலகமான தொங்கும் பூங்கா அலுவலகத்தில் மழைநீர் சேகரிப்பை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் மாதிரி வீடு அமைக்கும் பணி நேற்று துவங்கியது. மாநகராட்சி கமிஷனர் அலுவலகம் முன்பு, இந்த வீடு பிளைவுட் உள்ளிட்ட மரப்பொருட்கள் மூலம் கட்டப்பட்டு வருகிறது. ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையில் இதற்கு திட்டமதிப்பீடு தயாரித்து மாதிரி வீட்டை பிரமாண்டமாக அமைக்கிறோம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மாதிரி வீடு அமைக்க மட்டும் ரூ.10 லட்சத்திற்கு மேல் செலவாகிறதா என மக்கள் மிரட்சியுடன் பார்த்து சென்றனர். இது பற்றி சிலர் கூறுகையில், ‘‘கிராமத்தில் ரூ.5 லட்சத்தில் வீடு கட்டி குடியேறி விடுவோம். ஆனால், இங்கு மரப்பொருட்கள் மூலம் மாதிரி வீடு கட்டி மழைநீர் சேகரிப்பு விதத்தை சொல்லிக்காட்ட ரூ.10 லட்சம் செலவிடுவது ஆச்சரியமளிக்கிறது. இந்த செலவில் சாக்கடை கால்வாயை சீரமைத்து கொடுத்தால், கழிவுநீர் அடைப்பில்லாமல் போக வாய்ப்பாக இருக்கும்’‘ என்றனர்.