B40 ஆயிரம் கோடியில் புதிய சாலை திட்டங்கள் நிதின் கட்கரி அறிவிப்பு
புதுடெல்லி: மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ரூ.40 ஆயிரம் கோடி செலவில் புதிய சாலைகள் அமைக்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி நாடு முழுவதும் புதிராக ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய சாலைகள் அமைக்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் இந்த திட்டங்கள் நிறைவேற்றப்படும். இதில் ஜம்மு காஷ்மீருக்கு மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடியும், கடந்த ஆண்டு இமாலாய சுனாமியால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்துக்கு ரூ.6 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் சாலை மேம்பாட்டு திட்டங்களால் சுற்றுலா துறை மேலும் வளர்ச்சி அடையும். கடந்த ஆட்சியில் போடப்பட்ட 250 திட்டங்கள் பல்வேறு காரணங்களால் முழுமை பெறாமல் உள்ளது. நிலங்கள் கையகப்படுத்துவதில் உள்ள சட்டபிரச்னை, சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறுவதில் ஏற்படும் காலதாமதம் ஆகியன திட்டங்கள் பாதியில் நிற்பதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. சுமார் ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் நிலுவையில் உள்ளன. இவற்றை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து உரிய காலத்துக்குள் அனுமதி பெறப்படும். நாள் ஒன்றுக்கு 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய சாலைகள் அமைக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.