பாட்னா: பீகாரில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தண்டவாளத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்தனர். இதனால், இன்று அதிகாலையில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலும், சரக்கு ரயிலும் தடம் புரண்டன. ராஜ்தானி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் 4 பேர் பலியாயினர். 8 பேர் படுகாயமடைந்தனர்.டெல்லி-திப்ருகார் இடையிலான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் டெல்லியில் இருந்து திப்ருகார் நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் பீகார் மாநிலம், பாட்னா அருகே உள்ள சாப்ரா வழியாக வந்து கொண்டிருந்தது. கோல்டன் கஞ்ச் நிலையத்தின் அருகே வந்த போது ரயில் திடீரென தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டது. இந்த விபத்தில் 12 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி தாறுமாறாக ஓடி நின்றன. இதுகுறித்து ரயில்வே செய்தி தொடர்பாளர் அனில் சக்சேனா கூறுகையில், ‘அதிகாலை 2 மணி அளவில் பி1, பி2, பி3, பி4 மற்றும் சமையல் கோச் ஆகியவை கவிழ்ந்தன. அதனை தொடர்ந்து, அடுத்தடுத்து மொத்தம் 12 பெட்டிகள் தடம் புரண்டன. பாட்னாவில் இருந்து சுமார் 75 கிமீ தொலைவில் இந்த சம்பவம் நடந்துள்ளது’ என்றார்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியாயினர். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த ரயில்வே போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து, ரயில்வே வாரிய தலைவர் அருணேந்திர குமார் கூறுகையில், ‘ரயில் தடம் புரண்டதற்கு பின்னணியில் மாவோயிஸ்ட்களின் சதி திட்டம் உள்ளது. தண்டவாளம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டு ரயில் தடம் புரள செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். இதே நிலையத்தில் இருந்து சுமார் 60 கிமீ தொலைவில் மற்றொரு சரக்கு ரயிலும் தடம் புரண்டது. இதில் 18 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கின. தீவிரவாதிகள் வைத்த குண்டு வெடித்து தண்டவாளம் சேதமடைந்ததால் இந்த விபத்தும் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.இதற்கிடையில் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அப்பாவி மக்கள் மீது பாதுகாப்பு படையினர் கடுமையான ஆயுத தாக்குதல் நடத்துவதை கண்டித்து மாவோயிஸ்ட்கள் வேலை நிறுத்தத்திற்கு இன்று அழைப்பு விடுத்திருந்தனர்.
இதற்கிடையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 24 கிமீ தொலைவில் போலீசார் இரண்டு டைம்பாம் வெடிகுண்டுகளை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து, அந்த பகுதிக்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்துள்ளனர். கைப்பற்றிய டைம் பாம்களை செயல் இழக்கும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா, இணை அமைச்சர் மனோஜ் சின்கா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அமைச்சருடன் ரயில்வே வாரிய உறுப்பினர் பாண்டே, தொழில் நுட்ப வாரிய உறுப்பினர் அலோக் ஜோக்ரி உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் விரைந்துள்ளனர். சரண் தொகுதி எம்பி ராஜிவ் பிரதாப் ரூடி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக உயர் மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து பீகார் மாநிலம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. முக்கியமான இடங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.