காஷ்மீரில் வன்முறை ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்குதல் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய கும்பல் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் இளைஞர் ஒருவர் பலியானார். 3 பேர் காயம் அடைந்தனர். காஷ்மீர் மாநிலம் சோபுர் டவுனில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக நேற்று முன்தினம் மாலை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதை தொடர்ந்து அந்த இடத்துக்கு ராணுவத்தினர் விரைந்தனர். தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை நெருங்கியவுடன் அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே அங்கு துப்பாக்கி சண்டை மூண்டது. இதற்கிடையில் இரவு வந்ததால் சண்டை நிறுத்தப்பட்டது. தீவிரவாதிகள் தப்பி விடாமல் இருக்க அந்த வீட்டை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டது. இரவில் நிறுத்தப்பட்ட துப்பாக்கி சண்டை நேற்று காலை மீண்டும் தொடங்கியது. இதில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த மெகமூத் பாய் என்ற தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் பாகிஸ்தானை சேர்ந்தவர். அந்த வீட்டில் பதுங்கியிருந்த மற்றொரு தீவிரவாதி உள்ளுரை சேர்ந்தவர். அவர் தப்பி விட்டார்.
துப்பாக்கி சண்டை முடிவுக்கு வந்ததை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நேற்று மதியம் தங்கள் முகாமுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் சோபூர் நகர் முழுவதும் பரவியது. ஆங்காங்கு மக்கள் திரண்டனர். முகாமுக்கு திரும்பிக் கொண்டிருந்த ராணுவத்தினர் மீது இளைஞர் பட்டாளம் ஒன்று கல்வீசி தாக்குதல் நடத்தியது. வன்முறை கும்பலை கலைக்க வானத்தை நோக்கி சுடப்பட்டது. தொடர்ந்து அந்த கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தது. பாதுகாப்பு படையினரின் வாகனம் ஒன்றை தீ வைத்துக் கொள்ள வன்முறை கும்பல் முயன்றது. இதை தொடர்ந்து அந்த கும்பல் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அர்ஷத் அமகது ஷா என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என டாக்டர்கள் தெரிவித்தனர்.இதற்கிடையில் துப்பாக்கி சூடு நடத்திய பாதுகாப்பு படையினரை கைது செய்யும் வரை இளைஞரை புதைக்க அனுமதிக்க மாட்டோம் என வன்முறை கும்பல் சாலை மறியல் போராட்டம் நடத்தியது. போலீசார் விரைந்து சென்று கூட்டத்தினரை சமாதானப்படுத்த முயன்றனர். சில மணி நேரம் அங்கு பதற்றம் நிலவியது. பின்னர் கூட்டத்தினர் கலைந்து சென்றனர். பிரேத பரிசோதனைக்கு பின் இளைஞரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.