திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமிக்கு முன்னதாக வரும் 3 நாட்கள் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நாளை முதல் வசந்த உற்சவம் நடைபெற உள்ளது. கோடை காலத்தில் வெயில் அதிகளவு இருக்கும் என்பதால் சுவாமியை குளிர்விக்க வசந்த உற்சவம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.முதல் நாளான நாளை காலை 8 மணிக்கு மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் கோயிலிலிருந்து நான்கு மாடவீதி வழியாக ஊர்வலமாக சென்று வசந்த மண்டபத்தை அடைகிறார். அங்கு உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. 2வது நாள் காலை 8 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி தங்க தேரில் வீதியுலா சென்று வசந்த மண்டபத்தில் எழுந்தருள்கிறார்.
அங்கு உற்சவ மூர்த்திக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது. 3வது நாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி, சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர், ரூக்மணி, கிருஷ்ணர் ஆகியோர் கோயிலில் இருந்து நான்கு மாட வீதி வழியாக ஊர்வலமாக வந்து வசந்த மண்டபம் வந்தடைகின்றனர். அங்கு கோயில் ஜுயர்கள் முன்னிலையில் பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் மற்றும் மூலிகை திரவியங்கள் கொண்டு சுவாமி அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. வருடாந்திர வசந்த உற்சவத்தையொட்டி வசந்த மண்டபத்தில் வனப்பகுதியை போன்று அலங்கரிக்கும் பணியில் தோட்டதுறை ஊழிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வசந்த உற்சவத்தையொட்டி கோயிலில் வழக்கமாக நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.