தலிபான் தீவிரவாதிகளுடன் பாக். அரசு பேச்சு தொடக்கம்
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் மற்றும் தலிபான்கள் இடையே அமைதி பேச்சு வார்த்தை தொடங்கியது. அரசு பிரதிநிதிகள் ரகசிய இடத்தில் தலிபான் தலைவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளில் கடந்த பல வருடங்களாக தலிபான்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ படைகள் களம் இறங்கி உள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் படைகளை முற்றிலும் வாபஸ் பெற இங்கிலாந்து, அமெரிக்க நாடுகள் முடிவு செய்துள்ளன. கடந்த சில மாதங்களாக மீண்டும் தலிபான்கள் பல்வேறு பகுதிகளிலும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதற்கிடையில், பாகிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளுடன் அமைதி பேச்சு நடத்த பிரதமர் நவாஸ் ஷெரீப், 4 பேர் கொண்ட குழுவை அமைத்தார். இந்த குழுவில் மூத்த பத்திரிக்கையாளர் இர்பான் சித்திக், ரஹிமுல்லா யூசுப், ஓய்வு பெற்ற தூதர் ருஸ்தான் ஷா அகமது, ஓய்வு பெற்ற உள்துறை அதிகாரி முகமது அமீர் சித்திக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் பாகிஸ்தானில் உள்ள ரகசிய இடத்தில் தலிபான்களின் உயர் மட்ட தலைவர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து இரு தரப்பு பேச்சு வார்த்தை தொடங்கி நடைபெற்று வருவதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தானின் சமாதான பேச்சு வார்த்தைக்கு சம்மதம் தெரிவித்துள்ள தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பினரும் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக கமிட்டி ஒன்றை அமைத்துள்ளனர்.