லண்டனில் சுரங்க ரயில் ஊழியர்கள் ஸ்டிரைக் லட்சக்கணக்கான பயணிகள் பாதிப்பு
லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சுரங்க ரயில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பல ரயில் நிலையங்கள் மூடப்பட்டதால் லட்சக்கணக்கான பயணிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர்.லண்டனில் உள்ள சுரங்க ரயில் சேவை, உலகின் பழமையான சுரங்க ரயில் சேவைகளில் ஒன்று. 270 ஸ்டேஷன்களை உள்ளடக்கிய இந்த ரயில் போக்குவரத்தை தினமும் 30 லட்சம் பயணிகள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், சுரங்க ரயில் திட்டத்தை நவீனப்படுத்த லண்டன் போக்குவரத்து அமைப்பு முடிவு செய்துள்ளது. அனைத்து டிக்கெட் ஆபீஸ்களை மூடவும், 950 பணியிடங்களை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டங்களை லண்டன் மேயர் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சுரங்க ரயில் ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக நேற்று 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் ரயில்களை இயக்க ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. பல ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. லட்சக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். பஸ்களிலும் சைக்கிள்களிலும் நடை பயணமாகவும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். வழக்கத்துக்கு மாறாக சாலைகளில் கூட்டம் அலைமோதியது. லண்டனில் காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் மக்களுக்கு மேலும் சிரமம் ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரயில் போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் கூறுகையில், ‘ஊழியர்களை வேலையில் இருந்து தூக்குவதற்கு எளிய முறையில் எங்கள் எதிர்ப்பை காட்டியுள்ளோம். இதன்பிறகும் மேயர் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றனர். அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘ஆண்டுக்கு 50 மில்லியன் பவுண்டை மிச்சப்படுத்தும் வகையில் நவீனப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதை எதிர்ப்பது அர்த்தமற்றது என்றனர். ஊழியர்கள் ஸ்டிரைக்குக்கு பிரதமர் டேவிட் கேமரூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.