கோத்தகிரி:கோத்தகிரியில் இருந்து 30 கி.மீ தொலைவில் திருச்சிகடி கிராமத்தில் கோத்தர் இன பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இதே பகுதியில் ஒரு தனியார் தேயிலை தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலை உரிமையாளர் ராஜப்பன். கடந்த 1984ம் ஆண்டு திருச்சிகடி பகுதியை சேர்ந்த 33 கோத்தர் இன மக்களிடம் 100 ஏக்கர் நிலத்தை சிறு சிறுக ராஜப்பன் விலைக்கு வாங்கி உள்ளார். இடத்துக்கு சொந்தக்காரர்கள் பலர் இறந்து விட்ட நிலையில், அவர்களது வாரிசுகள் பழங்குடி இன மக்களின் நிலத்தை விற்க கூடாது என்ற சட்டம் இருப்பதால் தங்கள் நிலங்களை திருப்பித் தர வேண்டுமென பல முறை ராஜப்பனிடம் கேட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு கோத்தர் இனத்தை சேர்ந்த கிஷோர் குமார் (36), நந்திகேசன் (31) ஆகியோர் தேயிலை தொழிற்சாலைக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றி வந்த சவுந்தர்ராஜன் (50), காவலாளி ஜான்(31) ஆகியோர் காயம் அடைந்தனர். கிஷோர் குமாரும் தாக்கப்பட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கிராம மக்கள் திடீரென தேயிலை தொழிற்சாலையில் புகுந்து ஜன்னல், கதவுகள், அலுவலக அறையில் இருந்த பொருட்கள், கம்ப்யூட்டர்கள், தேயிலை தயாரிப்பு எந்திரங்களை அடித்து நொறுக்கினர். அங்கு நிறுத்தியிருந்த வாகனங்களையும் உடைத்தனர். இரு தரப்பிலும் கொடுத்த புகாரின் பேரில் கிஷோர்குமார், நந்திகேசன், நந்தகுமார், கம்பட்டன் உள்பட 20 பழங்குடியின மக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பழங்குடியின மக்களை தாக்கியதாக ராஜப்பன் (55), சவுந்தர்ராஜன் (50), ஜான் (30) உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.