அறந்தாங்கி:அறந்தாங்கியில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த பைனான்சியர் கழுத்தறுத்து கொல்லப்பட்டார். அவர் அணிந்திருந்த தங்க செயின், மோதிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா சிறுவனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(50). புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஆவுடையார்கோயில் அருகே உள்ள கரூர் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாத்திரம், சேர், பிளாஸ்டிக் சேர் ஆகியவற்றை வாடகைக்கு விடும் கடையும், அத்துடன் ஜல்லி, மணல் சில்லரை விற்பனை தொழிலும், பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார்.
இவரது மனைவி 25 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். குழந்தைகள் இல்லை. இதனால் ராஜேந்திரன் கடையிலே தங்கிக்கொண்டு அங்கேயே சமைத்து சாப்பிட்டு வந்தார். அவர் இரவில் கடை முன் படுத்துக்கொள்வார். விசேஷ நாட்களுக்கு மட்டும் சொந்த ஊருக்கு சென்று வருவார்.வழக்கம்போல் நேற்றிரவு பணி முடிந்ததும் ராஜேந்திரன் கடைமுன் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தார். இன்று அதிகாலை அவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் கட்டிலில் இறந்து கிடந்தார். இதைபார்த்த அப்பகுதியினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அறந்தாங்கி டிஎஸ்பி வெற்றிச்செல்வன், இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். கட்டில் அருகே 2 ஜோடி செருப்பு கிடந்தது. மோப்ப நாய் மோப்பம் பிடிக்காமல் இருக்க ராஜேந்திரன் உடல் முழுவதும் மற்றும் கட்டில் அருகேயும் மிளகாய்பொடியை தூவிச்சென்றுள்ளனர். இருப்பினும் மோப்பநாய் மார்ஷெல் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் மார்ஷெல் கொலை நடந்த இடத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தூரம் வரை ஓடி தேவகோட்டை சாலையில் உள்ள கடைதெருவில் நின்றது. இதனால் மர்ம நபர்கள் அங்கிருந்து பஸ் ஏறி தப்பிச்சென்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். ராஜேந்திரன் ஒரு தங்கசெயின், மோதிரம் அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது நகைகளையும் காணவில்லை. மர்ம நபர்கள் அவரை கொன்றுவிட்டு நகைகளையும் எடுத்துச்சென்றுவிட்டனர். கரூர் போலீசார் வழக்கு பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தையடுத்து கரூர் கிராமத்தில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன.